அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கிடும் வகையில் ரூ.14.66 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் ஒரு வேளை பூஜை கூட நடத்திட நிதிவசதி இல்லாத 12,959 திருக்கோயில்களுக்கு தலா ரூ.1 லட்சம் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதன் வட்டித் தொகையிலிருந்து ஒருகால பூஜை திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, இத்திட்டத்தில் புதிதாக 2,041 திருக்கோயில்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழான வைப்பு நிதியை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டு அதற்கான கூடுதல் செலவினத் தொகை ரூ. 170 கோடி அரசால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தின் கீழ் 15,000 திருக்கோயில்கள் பயன்பெற்று வருகின்றன.
இதுமட்டுமின்றி, ஒரு கால பூஜை திட்டம் செயல்படுத்தப்படும் திருக்கோயில்களில் பூஜை செய்திடும் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கிடும் வகையில் அர்ச்சகர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் கடந்த செப்டம்பர் 11ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டம் துவங்கப்பட்ட நாள் முதல் நாளது தேதி வரை அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.14.66 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 15,000 அர்ச்சகர்கள் ஊக்கத் தொகை பெற்று பயனடைவார்கள். இவ்வாறு அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:
#அர்ச்சகர்கள்
# ஊக்கத்தொகை
# அறநிலையத்துறை
# ஒருகாலபூஜைதிட்டம்