வங்கி கணக்குடன் ஆதாரை இணைத்தால்தான் இனி 100 நாள் வேலைக்கு சம்பளம்: மத்திய அரசு..!!

வங்கி கணக்குடன் ஆதாரை இணைத்தால்தான் இனி 100 நாள் வேலைக்கு சம்பளம்: மத்திய அரசு..!!
By: TeamParivu Posted On: March 17, 2023 View: 56

தமிழ்நாட்டில், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாளர்களில்,  42 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதார் எண்ணை கொண்டு பணம் வழங்கும் திட்டத்தின் (AEPS) கீழ் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை என்றும், எதிர்வரும் மார்ச் 31ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் மத்திய ஊரக  மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, நேற்றைய மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 100 நாள் வேலைத் திட்ட ஊதிய செயல்முறைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக கார்கே முன்வைத்த கேள்விகள் பின்வருமாறு:- 

கேள்வி எண் 1: 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் (ABPS) கட்டாயமாக்கப்பட்டுள்ளதா?

கேள்வி எண் 2: மாநில வாரியாக ABPS முறையின் கீழ் இணைக்கப்பட்ட, இணைக்கப்படாத பணியாளர்களின் எண்ணிக்கை விவரங்கள் தருக?

கேள்வி எண் 3: ABPS முறையின் கீழ் வராததால் ஊதியம் மறுக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை விவரங்களைத் தருக?

கேள்வி எண் 4: 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற ABPS முறையை கட்டாயமாக்குவதற்கான காரணங்களைத் தருக?

கேள்வி எண் 5: ABPS முறையினால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் தருக " ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி, "

கேள்வி 1-க்கான பதில் : 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற, ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் (AEPS) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கேள்வி 2-க்கான பதில்:  மாநிலங்கள் வாரியாக AEPS முறையின் கீழ் இணைக்கப்பட்ட/ இணைக்கப்படாத பணியாளர்கள் பட்டியலைப் பொறுத்த வரையில்,  உத்தரபிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 1 கோடிக்கும் அதிகமான பணியாளர்கள்  AEPS முறையின் கீழ் வரவில்லை. தமிழ்நாட்டில், 42 லட்சத்துக்கும் அதிகமானோர்  (42,88,339) ஆதார் எண்ணை கொண்டு பணம் வழங்கும் திட்டட்தின் (AEPS) கீழ் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

கேள்வி 3-க்கான பதில்: அப்படி யாரும் இல்லை.

கேள்வி 4-க்கான பதில் : பணியாளர்கள் அவ்வப்போது வங்கிக் கணக்கை மாற்றி வருவதும், இந்த தகவல்கள் திட்ட மேலாளர்கள் புதுப்பிக்காமல் இருப்பதும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த காரணங்களினால், ஆதார் எண்ணை கொண்டு பணம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. AEPS முறையின் கீழ் வங்கிக் கணக்கை மாற்றினாலும் பணம் செலுத்துவதில் பாதிப்பு வராது. மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் விதமாகவும் இது கொண்டு வரப்பட்டது.

கேள்வி 5க்கான பதில்: ABPS செயல்முறை படுத்துவதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கையின் அடிப்படையில், மார்ச் 31ம் தேதி வரை 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு ABPS அல்லது NACH என்ற மாற்று ஏற்பாடு மூலம் (National Automated Clearing House- தேசிய தானியங்கி தீர்வு இல்லம்) ஊதியம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ABPS பணம் செலுத்தும் முறை என்றால் என்ன? 

ABPS என்பது, வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கும் ஒரு செயற்முறையாகும். இதன் மூலம், இந்திய அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் அனைத்து மானியப் பலன்களையும் ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பெற முடியும். இதற்கு, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளைக்கு சென்று, உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மேலும், சுய விருப்பத்துடன், அனைத்து நேரடி மானியப் பலன்களை இந்த ஒரு வங்கிக் கணக்கில் பெற விரும்புகிறேன் என்று சம்மதம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு இணைப்பதினால், பல்வேறு நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. உதாரணமாக, ABPS வாடிக்கையாளர், அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுக்க வேண்டுமென்றால், வங்கிக் கணக்கு எண்ணிற்கு பதிலாக ஆதார் எண் உள்ளீடு செய்தால் போதுமானது. அந்த ஆதாரோடு இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

Tags:
#வங்கிகணக்கு  # ஆதார்  # ஊதியம்  # 100நாள்வேலை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..