அண்ணாசாலையில் மேம்பாலம்.. தீவுத்திடலில் திறந்தவெளி தியேட்டர்..: தமிழக பட்ஜெட்டில் சென்னைக்கான அறிவிப்புகள்..!!

அண்ணாசாலையில் மேம்பாலம்.. தீவுத்திடலில் திறந்தவெளி தியேட்டர்..: தமிழக பட்ஜெட்டில் சென்னைக்கான அறிவிப்புகள்..!!
By: TeamParivu Posted On: March 20, 2023 View: 45

தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

தொடர்ந்து 3வது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிகழ்த்திய பட்ஜெட் உரை பின்வருமாறு...

*தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடியாக குறைத்திருக்கிறோம்.பல நலத்திட்டங்களை செயல்படுத்தியபோதும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை மேலும் படிப்படியாக குறைக்கப்படும்.

*பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பிற்கு, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

*மாநில அரசின் வரி வருவாய் 2020-21ல் 5.58% குறைந்தது; மாநில அரசின் வரி வருவாய் கடந்த 2 ஆண்டில் 6.11%ஆக உயர்ந்துள்ளது.

*மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.

*அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள் ரூ.5 கோடியில் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

*உலக அளவில் தமிழ் மொழியை கொண்டு செல்வதற்காக தமிழ் பன்னாட்டு மாநாடு நடத்தப்படும். தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தி தமிழில் மென்பொருள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணைக்க தமிழ்ப் பண்பாட்டுக் கடல்வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும்.

*அகவை அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டையை அரசு வழங்கி வருகிறது. வரும் ஆண்டில், மேலும், 591 அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இச்சலுகையை அரசு வழங்கும்.

*சென்னையில் அனைத்துத் தரப்பு மக்களின் வரவேற்பினைப் பெற்றுள்ள சங்கமம் கலை விழா, வரும் ஆண்டில் மேலும் எட்டு நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.  

*சங்கமம் கலை விழாவுக்காக வரும் நிதியாண்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 20 புதிய நாட்டுப்புற கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

*சோழப் பேரரசு புகழை உலகறிய செய்ய தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும்.. சோழப் பேரரசின் கலைப் பொருட்களை பாதுகாக்கும் வகையில் சோழர் அருங்காட்சியகம் அமைப்பு.

*தமிழக ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தால், அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி ரூ.20 லட்சத்திலிருந்து, ரூ.40 லட்சமாக உயர்வு.

*இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகள் கட்ட ரூ.223 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*711 தொழில் நிறுவனங்களில் 8.35 லட்சம் தொழிலாளர்கள் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவ திட்டம் விரிவாக்கப்படும்.

*சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் கூடிய கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும்.

*அரசு ஸ்டான்லி மருத்துவனையில் புதிய பன்னோக்கு சிகிச்சை மையம், செவிலியர் விடுதி கட்டப்படும்.

*பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் ரூ. 40 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.   

*பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*ரூ.7,000 கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டம் மூலம் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்படும்.

*சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்படும்.சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.

*எண்ணும் எழுத்தும் திட்டமானது 2025ம் ஆண்டிற்குள் ஒன்று முதல் 3ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அடிப்படை கல்வியறிவும் எண்கணிதத் திறனும் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் வரும் நிதியாண்டில் 110 கோடி ரூபாய் செலவில் 4ம், 5ம் வகுப்புகளுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

*மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகம் ஜூன் மாதம் வாசகர்களை வரவேற்கும்.மதுரை கலைஞர் நூலகத்தில் 3.50 லட்சம் நூல்கள் தமிழ், ஆங்கிலத்தில் இடம்பெறும்.

*அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*உயர்கல்வித் துறைக்கு ரூ.6967 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*54 அரசு ஐ.டி.ஐ.க்கள் ரூ.2,783 திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும்.பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ரூ.200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.

*ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு மாதம் ரூ.25,000, முதல்நிலை தேர்வு எழுதுவோருக்கு மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்கப்படும்.

*சென்னையில் சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் அமைக்கப்படும்.

*ரூ.25 கோடியில் நவீன வசதியுடன் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படும்.

*அனைத்து சமூக பள்ளிகளும் ஒரேகுடையின் கீழ் கொண்டுவரப்படும்.

*ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூக பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும்.

*இந்து சமய அறநிலைத்துறை உட்பட பல்வேறு துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டுவரப்படும். இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும்.

*தொழில்சார் பயிற்சி தரும் நான் முதல்வன் திட்டம் மூலம் 12.70 லட்சம் மாணவர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

*முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு; தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.

*அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

*ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு இந்த நிதி ஆண்டில் ரூ.3,513 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும்; இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும்.

 *கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் வளாகத்தில் ரூ.80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

*மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. டுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.12000 ஆக அதிகரிப்பு.

*பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மானியத்திற்காக ₹10,500 கோடி ஒதுக்கீடு.மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ரூ.320 கோடி ஒதுக்கீடு.

*புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்குவதால் உயர்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளது.

*கடல் அரிப்பை தடுக்க, கடல் மாசுபாட்டை குறைக்க ரூ.2000 கோடி மதிப்பீட்டில் ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சித்திட்டம்’ உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

*ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் புதியதாக அமைக்கப்படும்; இது மாநிலத்தின் 18வது சரணாலயமாக இருக்கும்.

*BC, MBC, DNC மற்றும் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க ரூ.1580 கோடி ஒதுக்கீடு.

*கடந்தாண்டு மகளிர் உதவிக் குழுவுக்கு ரூ.24,212 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது; இந்தாண்டு ரூ.30ஆயிரம் கோடி கடன் வழங்க திட்டம்.

*விவசாய கடன் தள்ளுபடி ரூ.2391 கோடி; நகைக் கடன் தள்ளுபடி ரூ.1000 கோடி; சுயதவி குழு கடன் தள்ளுபடி ரூ.600 கோடி என மொத்தம் 3993 கோடி ஒதுக்கீடு.

*சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரூ.434 கோடியில் வெள்ளத் தணிப்பு தடுப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

*தெரு நாய் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விலங்குகள் நல வாரியம் மூலம் 10 கோடி ஒதுக்கீட்டில் இன விருத்தி கட்டுப்பாட்டு மையம்.

*பறவை பாதுகாப்பு, பறவை குறித்த ஆராய்ச்சிக்காக மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம்.

*முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், ரூ.2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5145 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்க திட்டம்.

*அம்ருத் 3.0 திட்டம் மூலம் குடிநீர் சீரமைப்பு , நீர்நிலை புதுப்பிப்பு, பசுமையான நகர்புறப் பகுதிகள் உருவாக்கம்
9ஆயிரத்து 378 கோடியில் ஏற்கனவே ஒப்புதல்; தற்போது ரூ.612 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர்.

*கோயம்புத்தூரில் ரூ.175 கோடி மதிப்பீட்டில், 2 கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைக்கப்படும்
முதற்கட்டமாக 45 ஏக்கரில் தாவரவியல் பூங்காவுடன் ரூ.172 கோடியில் கோவை செம்மொழி பூங்கா பணிகள் தொடங்கும்.

*ரூ.1500 கோடி மதிப்பீட்டில், 44 கி.மீ தூர அளவிற்கு அடையாறு, கூவம் ஆறுகள் சீரமைப்பு, பூங்காக்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும்.

*சென்னை பெருநகரில் தனியார் பங்களிப்புடன் கழிவறைகள் கட்டவும், மேம்படுத்தவும் ரூ.430 கோடி ஒதுக்கீடு.

*சென்னையில் மேம்படுத்தப்படும் கழிவறை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம், பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

*சென்னை தீவுத்திடலில், 30 ஏக்கர் பரப்பளவில், பொழுதுப்போக்கு சதுக்கம், மற்றும் திறந்தவெளி திரையரங்கம் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்.

*வட சென்னை வளர்ச்சித்திட்டம் ₹1000 கோடி செலவில் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

*சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி சாலையாக மேம்பாலம் கட்டப்படும். சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும்.

*சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ₹20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

*பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ரயில்வே போக்குவரத்து பங்களிப்பு குறைவாக உள்ளது; இதை சரி செய்ய, ரயில்வே அமைச்சகம் உடன் இணைந்து புதிய வழித்தடங்களை உருவாக்க புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும்.

*கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ₹9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.மதுரையில் ₹8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

*விருதுநகரில் ₹1,800 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா ஒன்றிய, மாநில அரசுகள் நிதி பங்களிப்புடன் அமைக்கப்படும்.

*தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது; உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும்.

*விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.  இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

*வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் ₹1600 கோடி செலவில் மேம்படுத்தப்படும்!
ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் தலா 1 லட்சம் சதுரடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

*அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ₹40 லட்சத்தில் இருந்து ₹50 லட்சமாக அதிகரிப்பு.

*தமிழ்நாடுபட்ஜெட்2023 | சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும்.

*அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ₹40 லட்சத்தில் இருந்து ₹50 லட்சமாக அதிகரிப்பு
“4,236 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது!

Tags:
#அண்ணாசாலை  # மேம்பாலம்  # திறந்தவெளிதியேட்டர்  # பட்ஜெட்  # சட்டப்பேரவை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..