தையூர் தொழிலாளர் ஓய்வுக்கூடத்தில் ஆய்வு; கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்..!!

தையூர் தொழிலாளர் ஓய்வுக்கூடத்தில் ஆய்வு; கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்..!!
By: TeamParivu Posted On: May 28, 2023 View: 35

தையூர் தொழிலாளர் ஓய்வுக்கூடத்தை ஆய்வு செய்து, கட்டுமான தொழிலாளர்களுக்கு 7 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். 

சென்னை கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமானத் தொழிலாளர்கள் ஓய்வுக்கூடத்தை,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது: தொழிலாளர் நலத்துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து படித்த, படிக்காத இளைஞர்களும் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 3 மாதகால திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட உள்ளது.

காஞ்சிபுரம் அருகே நீர்வள்ளூர் கிராமத்தில் உள்ள எல் அண்டு டி நிறுவனத்தில் 2 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான கட்டணம், தங்குமிடம், உணவு ஆகியவை இலவசம். இதற்கு 12ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ. படித்தவர்களும், பயிற்சியில் சேரலாம். இந்த பயிற்சியில் சேரும் அனைவருக்கும் எல் அண்டு டி நிறுவனத்தின் சார்பில், 100% வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். இதுமட்டுமின்றி, தையூர் மையத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் மற்றொரு திட்டமும் உள்ளது. தினசரி 800 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இதில் சேருவதற்கு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். சுமார் ரூ16 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 72000 சதுரஅடி உள்ள இந்த கட்டிடம் கடந்த 5 ஆண்டுகளாக வீணடிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்றதொரு கட்டிடம் திருப்பெரும்புதூர் அருகே எழிச்சூர் என்ற இடத்திலும் இருக்கிறது. இந்த இரு கட்டிடங்களும் இனி பூட்டப்பட்டு இருக்காது. 2 கட்டிடங்களும் இனி வருங்காலத்தில் முறையாக பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து இந்த அளவிற்கு வசதிகள் உள்ள கட்டிடம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமலும், பயன்படுத்தாமலும் இருந்த அதிகாரிகளை அழைத்து அமைச்சர் சி.வி.கணேசன் கடுமையாக எச்சரித்தார்.

Tags:
#தையூர்  # தொழிலாளர்  # திறன்மேம்பாட்டுபயிற்சி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..