10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பினால் மட்டுமே தனியார் பள்ளிகளின் தேர்வு முடிவு வெளியீடு: கல்வித்துறை சுற்றறிக்கை..!!

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பினால் மட்டுமே தனியார் பள்ளிகளின் தேர்வு முடிவு வெளியீடு: கல்வித்துறை சுற்றறிக்கை..!!
By: TeamParivu Posted On: April 18, 2023 View: 15

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் 20ம் தேதியுடன் தேர்வுகள் முடியும் நிலையில், 21ம் தேதி விடைத்தாள்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட விடைத் தாள் திருத்தும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அதன்பின்னர் வரும் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பினால் மட்டுமே சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளின் தேர்வு முடிவு வெளியிடப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இணை இயக்குநர் (பணியாளர்) செல்வகுமார், சிஇஓக்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்வி மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில், தங்கள் மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப விடைத்தாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாடவாரியான எண்ணிக்கை விவரம் அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த எண்ணிக்கைக்கு தக்கபடி மதிப்பீட்டுப் பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையினை கணக்கிட்டு பாடவாரியான மற்றும் பயிற்று மொழிவாரியாக உடனடியாக பணிவிடுவிப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலவழி விடைத்தாள்களையும் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த விதிமுறையை பின்பற்றி, தங்கள் மாவட்டத்தில் அமையும் மதிப்பீட்டு முகாமில் பெறப்படும் விடைத்தாள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதத்தில் ஆங்கிலம், தமிழ் வழிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் திட்டமிட்டு தொய்வில்லாமலும், காலதாமதமில்லாமலும் நடைபெற வேண்டும். இப்பணியினை மேற்கொள்ள தங்களது ஆளுகைக்குட்பட்ட அரசு பள்ளிகள், அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள், தனியார் (மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன்) பள்ளிகள் அனைத்திலிருந்தும், பத்தாம் வகுப்பு போதிக்கும் தகுதி வாய்ந்த பாட ஆசிரியர்களை தவறாமல் பணியிலிருந்து விடுவித்து, தேர்வாளர்களாக நியமனம் செய்து மதிப்பீட்டுப் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

எந்தவொரு பள்ளியிலிருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணித்தல் வேண்டும். தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அப்பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும். எனவே மொத்த எண்ணிக்கைப் பட்டியலை தவறாது சரிபார்த்து ஆசிரியர்கள் விடுபடாமல் வரவழைத்தல் வேண்டும். மேலும் ஒரு கல்வி மாவட்டத்தில் இரு முகாம்கள் அல்லது மூன்று முகாம்கள் அமைக்கப்பெற்றிருப்பின், முகாம்களின் தேவைக்கேற்ப விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாமல் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை சரிவர பிரித்து ஒதுக்கீடு செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியின்போது, முகாம் துவங்கும் முன்பும், முகாம் நடைபெறும் நேரத்திலும் வாயிற்கூட்டம் அல்லது வேறு விதமான சங்க போராட்டங்கள் எதுவும் நடைபெறாத வகையில் கண்காணிக்க முகாம் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:
#விடைத்தாள்  # ஆசிரியர்கள்  # தனியார்பள்ளி  # தேர்வுமுடிவு  # கல்வித்துறை  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..