கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் வரலாற்றில் முதல்முறையாக நாளை மலர் கண்காட்சி நடைபெறுகிறது. சுமார் 200 வகையான மலர்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நாளை கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது. மேலும், கலைஞரின் பிறந்தநாளில் சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
அதன்படி, கலைவாணர் அரங்கில் நாளை முதல் 5ம் தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்தநிலையில் ஊட்டி, கொடைக்கானல், மைசூரு போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வண்ண மலர்கள் சென்னை கலைவாணர் அரங்கிற்கு வந்து சேர்ந்தது. ஆர்க்கிட், ஆந்துாரியம், துலிப் பூ உள்ளிட்ட பல அரியவகை பூக்கள் மற்றும் பூச்செடிகள் 200க்கும் மேற்பட்ட வகைகளில் கண்ணை கவரும் மலர்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற இருக்கிறது.
கண்காட்சியில் மலர் அலங்காரங்கள், காய்கறியால் செதுக்கப்பட்ட உருவங்கள், செல்பி எடுப்பதற்கான பிரத்யேக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மலர் வளைவுகள், மலர் தொட்டிகளில் வண்ண மலர்கள், மலர்களால் வடிவமைக்கப்பட்ட கோப்பை ஆகியவை நிறுவப்பட்டுள்ளது. கலைவாணர் அரங்கில் சிறந்த புகைப்பட கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனுப்பும் சிறந்த புகைப்படங்கள் மலர்க் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது. கலைவாணர் அரங்கில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மலர்க் கண்காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என தோட்டக் கலைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலர்கள் கண்காட்சியை கண்டுகளிக்க சென்னைக்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்து மக்கள் ஏராளமானோர் வருவார்கள் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களுக்கு சென்று மலர்களை ரசிக்க முடியாதவர்களுக்கு இந்த மலர் கண்காட்சி அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இதேபோல், தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மலர்க் கண்காட்சிக்காக கலைவாணர் அரங்கம் விழாக் கோலம் பூண்டுள்ளது. மலர் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.50ம், மாணவர்களுக்கு ரூ.20ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரமாண்ட மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
Tags:
#மலர் கண்காட்சி
# கலைஞரின் பிறந்தநாள்
# சென்னை
# 200 வகையான மலர்கள்