முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கோவளத்தில் படகுப்போட்டி நடந்தது. தமிழ்நாடு சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். திருப்போரூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் ஒன்றியக்குழு தலைவருமான எல்.இதயவர்மன் வரவேற்றார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 23 மீனவ குப்பங்களில் இருந்து தலா 2 படகுகள் வீதம் 46 படகுகள் போட்டியில் கலந்துகொண்டன. இறுதிப்போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து, போட்டியில் வெற்றி பெற்ற கானத்தூர், கோவளம், செம்மஞ்சேரி கிராம மீனவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இதை தொடர்ந்து நடந்த நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. செல்வம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீ.அ.வைதியலிங்கம், வீ.தமிழ்மணி, து.மூர்த்தி, ஆர்.டி.அரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அதிமுகாவில் தற்போது தலைவர் யார் என்றே தெரியவில்லை. எடப்பாடி இதுவரை யாருக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. அவர் எம்.ஜி.ஆரை பார்த்ததில்லை. ஜெயலலிதாவுக்கும் நம்பிக்கையானவராக அவர் இருந்ததில்லை. காலில் விழுந்து பதவி வாங்கிய சசிகலாவுக்கு துரோகம் செய்து அவருக்கும் நம்பிக்கையானவராக இல்லை.
நண்பரைப் போன்று ஒன்றாக இருந்து விட்டு இன்று ஓ.பி.எஸ்சை கழட்டி விட்டுள்ளார். தலைவரை தேடிக் கொண்டிருக்கும் கட்சி அது. தற்போது பா.ஜ. அலுவலக வாசலில் காத்துக் கொண்டு உள்ளனர். பா.ஜ. ஒரு கட்சியே அல்ல. அது ஆடியோ, வீடியோ கட்சி. கட்சிக்காரர்களை வேவு பார்த்து வீடியோ எடுத்து ஆடியோ பதிவு செய்து வெளியிட்டு மிரட்டும் கம்பெனி அது. ஆகவே, இந்த கட்சிகளை பார்த்து மக்கள் முடிவு செய்ய வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறை ஆதரித்தது போல் இந்த முறையும் ஆதரித்து மத்தியில் தி.மு.க. தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைய மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:
#நாடாளுமன்றதேர்தல்
# திமுக
# மக்கள்ஆதரவு