அம்பாசமுத்திரம் அருகே விசாரணை கைதிகளை துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களை பிடுங்கி உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல் துறையினர் துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் மற்றும் சார் ஆட்சியர் விசாரணை நடத்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரால் உத்தரவிடப்பட்டது.
இந்நிகழ்வில் பல்வீர்சிங், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கல்லிடைக்குறிச்சி காவல்நிலைய முதல்நிலை காவலர் ராஜ்குமார், வி.கே.புரம் காவல்நிலைய காவலர் போகபூமன், அம்பாசமுத்திரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், கல்லிடைக்குறிச்சி வட்ட காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, வி.கே.புரம் வட்ட காவல் ஆய்வாளர் பெருமாள், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட சார்ஆய்வாளர் சக்தி நடராஜன், அம்பாசமுத்திர காவல் நிலைய தலைமை காவலர் சந்தானகுமார், அம்பாசமுத்திரம் காவல் நிலைய முதல்நிலை காவலர் மணிகண்டன் ஆகியோர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வந்த புகார்களையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுபடி, சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் மற்றும் சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு, தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கடந்த 3ம் தேதி சமர்ப்பித்துள்ளனர். அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் மற்றும் சார் ஆட்சியரின் முதற்கட்ட விசாரணை அறிக்கை மற்றும் காவல் உட்கோட்டத்தில் அமைந்துள்ள வேறு காவல் நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாக புகார்கள் வந்துள்ளதை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் இந்நிகழ்வு தொடர்பாக ஓர் உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட கடந்த 4ம் தேதி கடிதம் மூலம் அரசிற்கு பரிந்துரை செய்துள்ளார்.
அதன்படி, அந்த பரிந்துரையை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில், தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மீதும் மற்ற காவல் துறையினர் மீதும் விசாரணை கைதிகளை துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாகவும், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும், விரிவான விசாரணை நடத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு செயலாளர் அமுதாவை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்கிறது. அடுத்த ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Tags:
#அதிகாரி
# அமுதா
# ஐஏஎஸ்
# தமிழ்நாடுஅரசு