சென்னை – கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். இதன்பிறகு, ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்திற்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையம் சென்றார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை – கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் இதுவாகும். இந்தியாவில் இயக்கப்படும் 12-வது வந்தே பாரத் ரயில் இதுவாகும். சென்னையில் இருந்து கோவைக்கு மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயிலின் அதிகபட்ச வேகம் 160 கி.மீ ஆகும். 490 கி.மீ தூரத்தை 5.50 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் சென்றடையும்.
சேவையின் முதல் நாளான இன்று பெரம்பூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் ரயில் நின்று செல்லும். கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11.50-க்கு வந்தே பாரத் ரயில் சென்னை வந்தடையும். சென்னையில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15-க்கு வந்தே பாரத் ரயில் கோவை சென்றடையும் . முன்பதிவு தொடங்கிய உடனேயே முதல் 2 நாட்களுக்கான டிக்கெட் முழுவதுமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:
#வந்தேபாரத்
# ரயில்