''தமிழகத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் வகையில் புதிய திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் நடந்த பல நலத்திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
'வணக்கம் தமிழ்நாடு' எனக்கூறி உரையை துவக்கிய மோடி பேசியதாவது: தமிழகம் வருவது எப்போதும் மகிழ்ச்சி. வரலாற்று பாரம்பரியத்தின் இருப்பிடம். கலாசாரம் மற்றும் வரலாற்று சிறப்பிடம். மொழி இலக்கியத்தின் பிறப்பிடம். தேசபக்தி, தேசிய உணர்வு ஆகியவற்றின் மையம். பல சுதந்திர போராட்ட தியாகிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
விமானம், ரயில், சாலை என கட்டமைப்பு திட்டங்கள் துவக்கப்பட்டு உள்ளன. புத்தாண்டு பிறக்க உள்ள போது புதிய திட்டங்களின் துவக்கமாக புத்தாண்டு அமைய உள்ளது. புதிய திட்டங்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு உற்சாகமாக அமையட்டும்.புத்தாண்டு, புதிய ஆற்றல், நம்பிக்கைகள், எதிர்பார்ப்பு ஆகியவற்றுக்கான புதிய துவக்கமாக அமையும்.
கட்டமைப்பு துறையில் புதிய புரட்சியை இந்தியா செய்து வருகிறது.கட்டமைப்பு முதலீட்டிற்காக ரூ.10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. 2014ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட 5 மடங்கு தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 4 ஆயிரம் கி.மீ., தூர ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படுகின்றன. துறைமுகங்களின் திறன் மேம்பாடும் இரு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் விமான நிலையங்கள் 150 ஆக இரட்டிப்பாகி உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மும்மடங்காகி உள்ளது. 2014 ஆண்டில் 380 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. தற்போது 660 கல்லூரிகள் உள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2 லட்சம் கிராமங்களுக்கு அகண்ட அலைவரிசை வசதி செய்யப்பட்டு உள்ளது.
முன்பு கட்டமைப்பு திட்டங்கள் தாமதம் என்பது விதியாக இருந்தது. தற்போது அது
நாட்டில் பணிக்கலாசாரம் மாறி உள்ளது. அர்ப்பணிப்பு உணர்வு அதிகரித்துள்ளது. மக்கள் செலுத்தும் வரிப்பணம் திட்டங்களுக்கு முறையாக செலவு செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம். நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் இணையதள வசதி அதிகரித்துள்ளது.குறித்த காலத்திற்கு முன்னதாகவே இலக்கை எட்டும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. முதலீடு வருவதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகும்.
தமிழகம் வளர்ச்சி எங்களுக்கு முக்கியமானது. ரயில்வே கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு இதுவரை இல்லாத அளவாக 6 ஆயிரம் கோடிக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2014க்கு பிறகு தமிழகத்தில் ரயில்வே பணிகள் இருமடங்காகி உள்ளது. சிறந்த சாலை கட்டமைப்பை பெற்று சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.பாரத் மாலா திட்டத்தின் கீழ் விழுப்புரம் - கன்னியாகுமரி இடையிலான கடற்கரை சாலை மேம்படுத்தப்படும்
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகளில் 800 கி.மீ., தூரத்திற்கு மட்டுமே நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. பா.ஜ., ஆட்சியில் 2 ஆயிரம் கி.மீ., தூரம் நெடுஞ்சாலை அமைத்துள்ளோம். 2014- 15 ஆண்டை விட தமிழக நெடுஞ்சாலை திட்டங்களுக்கு 6 மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் துவங்கி வைக்கப்பட்ட ஜவுளி பூங்கா தமிழக வளர்ச்சிக்கு உதவும்.
தமிழகத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் பல புதிய திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழகத்தின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய விமான நிலைய முனையம் அமைக்கப்பட்டு உள்ளது.துவக்கி வைக்கப்பட்ட திட்டங்களால் சென்னை, கோவை, மதுரை பயனடையும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Tags:
#தமிழகம்
# நிதி
# பிரதமர்மோடி