நாடு முழுவதும் அமலாக்கத்துறையைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஜவஹர்லால் நேருவால், 1938ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது "நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனம்". சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரசின் குரலாக ஒலித்து வந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ரூ.90 கோடிக்கும் மேலான கடன் சுமையால் அந்நிறுவனம் மூடப்பட்டது. இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியால் தொடங்கப்பட்ட "யங் இந்தியா லிமிடெட்" என்ற நிறுவனம் 2010-ம் ஆண்டில் கையகப்படுத்தியது.
இதில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் 1,057 பங்குதாரர்களுடன் எவ்வித ஆலோசனை செய்யாமல் 50 லட்சம் ரூபாய்க்கு தொடங்கப்பட்ட 'யங் இந்தியா' நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் 2,000 கோடி ரூபாய் வரை ஆதாயம் அடைந்துள்ளதாக கூறி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து, அதிகளவு பணம் மோசடி மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை கீழ் 2014ஆம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. 2015ஆம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வரும் இவ்வழக்கில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி இருவருக்கும் உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.
மேலும், இதே வழக்கில் 2016ம் ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா, சுமந்த் துபே, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரடியாக ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து இருந்தது. இவ்வழக்கில் இறுதியாக அமலாக்கத்துறை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தியது.
இந்நிலையில் மேற்கொண்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவருக்கும் அமலாக்கthதுறை நேரில் ஆஜராகுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சம்மன் அனுப்பியது.
சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், ‘நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 13 ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாநில தலைவர்கள் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில், வரும் 13ம் தேதி நாடு முழுவதும் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தின் முன்பு சத்யாகிரக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அப்போராட்டத்தில் டெல்லியை பொறுத்தவரை நாடாளுமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்களும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி மாபெரும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:
#காங்கிரஸ்
# ராகுல்காந்தி
# சோனியா காந்தி
# அமலாக்கத்துறை