குஜராத்தில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் அலுவலகங்களுக்கும் மற்ற இடங்களுக்கும் தங்களது சொந்த வாகனங்களில் செல்வதற்கு அதிக விருப்பம் காட்டுகின்றனர். உள்ளூர் சாலைகளில் மிகவும் பொறுப்பாக வாகனம் ஓட்டும் அவர்கள், மற்ற மாநிலங்களின் எல்லைகளுக்கு செல்லும்போது பொறுப்பற்ற முறையில் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மேலும் பல்வேறு மாநிலங்களில் குஜராத்தை சேர்ந்த ஓட்டுநர்களின் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆச்சரியப்படத்தக்க விதத்தில் சமீபத்தில் அகமதாபாத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு ராஜஸ்தான், கோவா, மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில காவல்துறையினரிடம் இருந்து கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட நபர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதற்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவருமே பொறுப்பற்ற முறையில் வாகனங்களை இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். விண்ணப்பத்தை பரிசீலித்து பார்த்த அகமதாபாத் ஆர்டிஓ அலுவலகம் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மேலும் அந்த 300 ஓட்டுநர் உரிமங்களுக்கு சொந்தமானவர்களையும் கண்டறிந்து அவர்கள் செய்த குற்றத்தை உறுதி செய்யும் வேலையை தொடங்கி உள்ளது.
இதைப் பற்றி பேசிய அகமதாபாத் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறுகையில், “கோவா, ராஜஸ்தான் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து அனுப்பப்பட்ட ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதற்கான விண்ணப்பங்களை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். இந்த விண்ணப்பங்கள் அனைத்துமே பொறுப்பற்ற முறையில் வாகனங்களை இயக்கிய குற்றத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மோட்டார் வாகன சட்டத்தை அந்தந்த மாநிலங்களில் மீறியதற்காக அந்த மாநில காவல் துறையினரால் உறுதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது" என்று கூடியுள்ளார்.
Tags:
#குஜராத்
# ஓட்டுனர்உரிமம்