தீபாவளியை முன்னிட்டு பேருந்துகளிலும், ரயில்களிலும் மக்கள் முண்டியடித்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து கடந்த சில தினங்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளிலும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்துள்ளனர்.இதுஒருபுறமிருக்க பட்ஜெட் பயணம் என்றால் அது ரயில் பயணம் தான் என்று ரயில்களிலும் கூட்டம் முண்டியடித்ததும் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.இந்நிலையில் தீபாவளி முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னை, கோவை போன்ற பெருநகரங்களை நோக்கி திரும்பி வருவதற்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை – தாம்பரம் இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 8.10 மணிக்கு நெல்லை சென்றடையும். தீபாவளி பண்டிகையை முடித்து ஊர் திரும்புவோருக்கு ஏதுவாக நாளை (நவம்பர் 13) நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதேபோல் நாளை மறுநாள் நவம்பர் 14ஆம் தேதி கோவை திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் காலை 9 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு திண்டுக்கல்லை பிற்பகல் ஒரு மணிக்கு அடைகிறது. மறு மார்க்கத்தில் திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கோவையை மாலை 5.30 மணிக்கு அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ரயிலில் முன்பதிவு வசதி இல்லாத 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.