புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் நிலையில், வேலைக்கு வராத ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் 500 நிரந்தர ஊழியர்களும் 270 ஒப்பந்த ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். நேர தகராறு காரணமாக கடந்த 10 நாட்களில் 5பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனை கண்டித்து புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் வெள்ளிக்கிழமை முதல் திடீர் வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர்.
பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பணிமனை முன்பு அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சென்னை,மாகே, திருப்பதி, பெங்களூர்,காரைக்கால் போன்ற வெளியூர்களுக்கும் உள்ளூரில் நகரம் மற்றும் கிராமங்களுக்கு பேருந்து இயக்கப்படவில்லை. 3வது நாளாக தொடரும் போராட்டத்தால் போக்குவரத்து கழகத்திற்கு 30 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் முன் அறிவிப்பு இன்றி போராட்டத்தை நடத்தும் ஒப்பந்த ஊழியர்களான புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என 12 பேரை போக்குவரத்து கழகம் பணி நீக்கம் செய்துள்ளது. நேற்று முதலமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து 3வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
பணியின் போது பாதுகாப்பு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணியிலிருந்து நீக்கப்பட்ட 12 ஊழியர்கள் மீண்டும் சேர்க்க வேண்டும் என கோரி போராட்டம் தொடர்கிறது. இந்த நிலையில் நிர்வாகம் தரப்பில் சுற்றிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், போராட்டம் நடத்தும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்க நிர்வாகம் தயாராக இருக்கிறது.அதை விடுத்து முன்னறிவிப்பின்றி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது தவறு. பொது மக்களை பாதிக்கக்கூடிய செயலாகும். அதனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பணிக்கு வராதவர்களுக்குபணிக்கு வரவில்லை" என குறிப்பிட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும்..மீறி போராட்டத்தில் ஈடுபடும் ஓட்டுனர், நடத்துனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மேலாளர் ஏழுமலை சுற்றறிக்கையில் எச்சரித்துள்ளார்.
Tags:
#புதுச்சேரி
# வேலை நிறுத்த போராட்டம்
# போக்குவரத்து துறை