கோவையில் ‘ஃப்ளூ’ காய்ச்சல் பாதிப்பால் உள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோவையில் ‘ஃப்ளூ’ காய்ச்சல் பாதிப்பால் உள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
By: TeamParivu Posted On: November 14, 2023 View: 30

கோவை: கோவையில் ‘ஃப்ளூ’ வைரஸ் பாதிப்பு காரணமாக உள்நோயாளி யாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநர் அருணா கூறியதாவது: கோவை மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சராசரியாக காய்ச்சல் பாதிப்புக்காக ஒரு நாளைக்கு உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது 50-ஆக இருந்தது. இந்த எண்ணிக்கையானது தற்போது 100 வரை அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம், பண்டிகை காலத்தை முன்னிட்டு கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு மக்கள் சென்று வந்தது ஆகியவை ஃப்ளூ வைரஸ் பரவ காரணங்கள் ஆகும். குழந்தைகள், முதியவர்களுக்கு விரைவாக இந்த வைரஸ் பரவுகிறது.
ஃப்ளூ வைரஸ் பாதித்ததற்கான அறிகுறிகள் மட்டும் இருந்து ஆரோக்கியமாக இருப்பவர்கள், அறிகுறிகளோடு இணைநோய்கள் இருப்பவர்கள், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, ஆக்சிஜன் அளவு குறைவு, ரத்த அழுத்தம் குறைவு உள்ளிட்ட பாதிப்புகளோடு இருப்பவர்கள் என நோயாளிகளை மூன்று வகையாக பிரிக்கிறோம். இதில், மூன்றாவது பிரிவினரை மட்டும் மருத்துவமனைகளில் அனுமதித்தால் போதுமானது. இருப்பினும், இணைநோய்கள் உள்ளவர்களையும் மருத்துவ மனைகளில் அனுமதிக்கின்றனர். சுவாசக் குழாய் மூலமாகத்தான் இந்த வைரஸ் உடலுக்குள் செல்கிறது. ஒருவர் இருமும்போதும், தும்மும்போது மற்றவருக்கு பரவுகிறது.
வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி இருக்கும். இது நீடிக்கும்போது இருமல் வரும். பொதுவாக 7 நாட்களில் இந்த பாதிப்பு தானாகவே சரியாகிவிடும். எனவே, பொதுமக்கள் மருந்து கடைகளில் சுயமாக மருந்து வாங்கி உட்கொள்ளக்கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்று, பரிந்துரைக்கப்படும் மருந்துகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். தொடக்க நிலையிலேயே மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..