சென்னையில் இயல்புக்கு திரும்பும் பொதுப் போக்குவரத்து: எப்போது முழுதாக சீரடையும்?

சென்னையில் இயல்புக்கு திரும்பும் பொதுப் போக்குவரத்து: எப்போது முழுதாக சீரடையும்?
By: TeamParivu Posted On: December 07, 2023 View: 33

புறநகர் ரயில்கள் இன்று முதல் வழக்கமாக இயங்கும் நிலையில் பேருந்து போக்குவரத்தும் முழுவதும் விரைவில் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் சிக்கல், மின்சாரம், பெட்ரோல், டீசல் கிடைப்பதில் சிக்கல், சாலைகள், ரயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து தடைபட்டது என இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் புறநகர் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பேருந்துகளும் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படாமல் உள்ளன.

இதனால் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இருப்பினும் புறநகர் ரயில் கட்டணத்துக்கும், மெட்ரோ கட்டணத்துக்கும் பல மடங்கு வித்தியாசம் உள்ளது. அதேபோல் ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த நேரத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுகின்றன. சாலைகள் சரியில்லை, பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது, அடிக்கடி வாகனங்கள் பழுதாகிறது, எரிபொருள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது இதையெல்லாம் சமாளித்து தான் ஆட்டோக்களை இயக்குகிறோம் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழலில் பொதுப் போக்குவரத்து சீரடைந்தால் மட்டுமே மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் சூழல் உள்ளது, இந்நிலையில் இன்று முதல் புறநகர் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், கடற்ரை -செங்கல்பட்டு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்தாரிபேட்டை - வேளச்சேரி பறக்கும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்.

கும்மிடிப்பூண்டி வழித்தடம் தவிர மற்ற அனைத்து வழி தடங்களில் மின்சார ரயில்கள் வழக்கமான கால அட்டவணைபடி இயக்கப்படும் என்றும் கும்மிடிப்பூண்டி தடத்தில் 30 நிமிடங்களில் ஒரு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து போக்குவரத்தைப் பொறுத்தவரை பேருந்துகள் செல்லும் அளவுக்கு சாலைகள் சீராக உள்ள வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும். பயணிகளின் வருகைக்கு ஏற்ப, மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பயணியர் பாதுகாப்பை கருத்தில் கொண்டே, உட்பகுதிகளில் செல்லும் பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டுள்ளதாகவும் 60 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.


  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..