சென்னை: இறந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை கூடத்தின் உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகம் நியமித்துள்ளது.
புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மன்சூர். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சோனியா. இவருக்கு கடந்த டிசம்பர் 5-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், புயல், மழை காரணமாக அவர்களால் வீட்டில் இருந்து வெளியேறி மருத்துவ உதவியை நாட முடியவில்லை. மேலும், ஆம்புலன்ஸ் சேவையையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், சோனியாவுக்கு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், குழந்தையின் உடலில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருந்ததால், குழந்தையையும், சோனியாவையும் சிகிச்சைக்காக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மன்சூர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து, குழந்தையின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு பின்னர் உடலை பிரேத பரிசோதனை செய்யாமலும் விதிகளுக்கு மாறாக அட்டைப்பெட்டியில் வைத்து அவரது தந்தையிடம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து குழந்தையின் தந்தை மன்சூர் கூறும்போது, ‘குழந்தையின் உடலை எங்களிடம் கொடுக்கும்போது, பிரேத பரிசோதனை செய்யவில்லை. மேலும், துணி ஏதும் சுற்றாமல் அட்டை பெட்டியில் வைத்து எங்களிடம் வழங்கினர். பின்னர், எங்கள் மசூதி மூலமாக துணி ஏற்பாடு செய்து, அதன் பிறகு குழந்தை உடலில் சுற்றி எடுத்து சென்று அடக்கம் செய்தோம்’ என்றார்.
இந்த விவாகரம் குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த 6-ம் தேதி சோனியா என்பவர் வீட்டிலேயே ஒரு பெண் குழந்தையை இறந்த நிலையில் பெற்றெடுத்து தாயும் சேயும் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்த பெண் குழந்தையின் உடலை குழந்தை நல மருத்துவர்கள் முழுவதுமாக பரிசோதனை செய்து, குழந்தை இறந்ததை உறுதி செய்தனர். அதன் பின்னர் பிரேத பரிசோதனை அறையில் குழந்தையின் உடல் வைக்கப்பட்டது. பின்னர், குழந்தையின் தாய் சோனியா அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி போலீஸ் விசாரனைக்குப் பின், குழந்தையின் உடலை விதிகளுக்கு முரணாக அட்டைப்பெட்டியில் வைத்து தந்தை மன்சூரிடம் ஒப்படைக்கப்பட்டது உண்மையென்று விசாரணையின் மூலம் மருத்துவமனை முதல்வருக்கு தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சரின் உத்தரவின்படி சம்மந்தப்பட்ட அரசு பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் இந்த நிகழ்வை மருத்துவ கல்வி இயக்கம் மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநர் ஆய்வுசெய்து, மருத்துவமனை முதல்வருக்கு சம்மந்தப்பட்ட நபர்களின் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். மேலும் இந்த நிகழ்வை விசாரணை செய்வதற்காக 3 பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.