மதுரை கலைநகர் தபால்தந்தி நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகள் மெளனிஷா (28). தகவல் தொழில்நுட்பப் பொறியாளரான இவர் ஐ.டி துறையில் வேலைபார்த்தார். இதில் விருப்பம் இல்லாமல் பெண்கள் சுயமாக இருக்கவும், சொந்த காலில் நிற்கும் வகையிலும் நிகழ்ச்சி ஏற்பாடுகள், மேடை அலங்காரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 4 ஆண்டாக மதுரையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள், மேடை அலங்கார வடிவமைப்பில் ஈடுபடுவதோடு பெண்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.
இதுகுறித்து மெளனிஷா கூறியதாவது: ''நான் ஐடி துறையில் வேலைபார்த்தேன். போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் சொந்தமாக தொழில் செய்ய முடிவெடுத்தேன். இதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக மாறினேன். திருமண விழாக்கள், பிறந்தநாள் விழாக்களில் அரங்குகள் வடிவமைப்பு செய்ய ஆரம்பித்தேன். மதுரையில் கடந்த 4 ஆண்டுகளாக செய்து வருகிறேன்.இதில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. பொதுவாக பெண்கள் பொறுமையாகவும், கலை நயத்தோடும் வேலைகளில் ஈடுபடுவதால் பெண்களுக்கு பயற்சி அளித்து வருகிறேன். பெண்கள் வீட்டிலிருந்தவாறே போட்டோ, வீடியோ எடிட்டிங் செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கிறேன். நிகழ்ச்சி ஏற்பாடு, மேடை அலங்கார வடிவமைப்பு குறித்து பயிற்சி அளிப்பதோடு அதற்குரிய வேலைவாய்ப்புகளையும் அளித்து வருகிறேன். மதுரையில் முதல்முறையாக இதற்காக பயிற்சி மையம் ஏற்படுத்தி நடத்தி வருகிறேன்'' என்றார்.