விழுப்புரம்: தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து பேருந்துகளும் இன்று முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் என்று தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ( விழுப்புரம் கோட்டம் ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ( விழுப்புரம் கோட்டம் ) போக்குவரத்துக் கழகத்தின் பொது மேலாளர் அர்ஜூனன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் ( ஜன.30 ) கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பறநகர் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும்.இதன் அடிப்படையில் விழுப்புரம் மண்டலத்தில் இருந்து சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, செஞ்சி, புதுச்சேரி மற்றும் திண்டிவனம் ஊர்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வழியாக இனி தாம்பரம் வரை இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்குள் செல்லும் பிற பேருந்து மாதவரம் புறநகர் பேருந்து முனையம் வரை இயக்கப்படும். இப்பேருந்துகள் மதுரவாயல் சுங்கச்சாவடி, அம்பத்தூர் எஸ்டேட் வழியாக மாதவரத்துக்கு இயக்கப்படும்.
மேலும் இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. இப்பேருந்து இயக்க மாற்று ஏற்பாட்டின்படி பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், புதுச்சேரி, கடலூரில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியே சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் பழைய முறைப்படி திருவான்மியூர், மத்தியகைலாஸ், அசோக்நகர் வழியே கோயம் பேட்டைச் சென்றடையும். இந்த புதிய மாற்றத்தால் புதுச்சேரி வழியாக கிழக்கு கடற்கரைச்சாலை வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளின் எண் ணிக்கை குறைந்துள்ளது.