2400 கோடி ரூபாய்… 14 ஆயிரம் வீடுகள்.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்.!

 2400 கோடி ரூபாய்… 14 ஆயிரம் வீடுகள்.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்.!
By: TeamParivu Posted On: February 06, 2024 View: 47

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை, யானை கவுனி பகுதியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு இருந்தன. இந்த குடியிருப்புகளை இன்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 1970ஆம் ஆண்டு தமிழக் அரசு சார்பில் குடிசை மாற்று வாரியம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதி. அதனை தற்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் மாற்றி செயல்படுத்தி வருகிறார். அதன் பெயர் மாற்றத்திலேயே தெரிந்து இருக்கும் அந்த துறை மூலம் குடிசைகள் பெரும்பாலும் கான்க்ரீட் வீடுகளாக கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

கீற்று கூரையாக இருந்த வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக கட்டி கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி . அந்த கட்டடங்கள் பழுதாகிவிட்டதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறியதன் பெயரில், தற்போது அந்த வீடுகள் புதுப்பிக்கப்பட்டு அதிகமான குடியிருப்புகள் கொண்ட வீடுகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
முன்னர் இதில் 254 வீடுகள் இருந்தன. தற்போது 34 வீடுகள் அதிகமாகி தற்போது 288 வீடுகள் மக்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னர், 326 சதுர அடியில் ஒவ்வொரு வீடும் இருந்தது. அது தற்போது 412 சதுர அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்த நன்மையையும் கூடுதலாக கொடுப்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். அதே போல தான் இந்த “கல்யாணபுரம் திட்டமும்” என அமைச்சர் கூறினார்.
மேலும்,  கடந்த அக்டோபர் மாதம் திருவிக நகர், பெரியார் நகர் பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில்,  516 கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரம் வீடுகள் கொண்ட குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. என்னுடைய சேப்பாக்கம் தொகுதியிலும் இதே போன்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதனை அந்த துறை அமைச்சர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என தனது தொகுதி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு பணிகளை நினைவூட்டினார் அமைச்சர் உதயநிதி.
அடுத்ததாக, தமிழகம் முழுவதும், சுமார் 2400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 14 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அனைவருக்கும் வீடு என்பதே எங்கள் அரசின் நோக்கம். இது உங்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட வீடுகள். நீங்கள் பணம் செலவழித்து வாங்கப்பட்ட வீடுகள் போன்றது. நீங்கள் உங்களுக்கென குடியிருப்புகள் நல சங்கம் ஒன்றை தொடங்க வேண்டும். உங்கள் வீட்டை நீங்கள் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
சொந்த வீடு போல அதனை நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.   பக்கத்து வீட்டுக்காரருக்கு ஏதும் பிரச்சனை என்றால் நீங்கள் போக வேண்டும். அப்போது தான் உங்கள் வீட்டு பிரச்சனைக்கு அவர்கள் வருவார்கள் என அனைவரது ஒற்றுமையையும் வலியுறுத்தி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசினார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..