மாநகர பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி, மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிப்பதை தடுக்கும் வகையில் சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை பிடித்து, அடுத்த முறை பிடிபட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும், என எச்சரித்து அனுப்பி வைத்தனர். சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் மாநகர பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். பல இடங்களில் மாணவர்கள் பேருந்து புறப்பட்ட பிறகு ஓடிவந்து ஏறுவது, ஒரு காலை படியில் வைத்து, மற்றொரு காலை தரையில் தேய்த்தபடி செல்வது, ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணிப்பது, படிக்கட்டில் மொத்தமாக நின்று பயணிகளுக்கு இடையூறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பஸ் டிரைவர்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு தாக்குதல் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, போராட்டத்தில் ஈடுபடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், பயணிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, பேருந்துகளில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்கும் வகையில், மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார் பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனாலும், பல இடங்களில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணிப்பதும், இதை கண்டிக்கும் டிரைவர்கள், நடத்துனர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை சென்னை மாநகரம் முழுவதும் அனைத்து பேருந்து நிறுத்தங்களில் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பேருந்துகளில் ஆபத்தான முறையில் படிக்கட்டு பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை பிடித்து கடுமையாக எச்சரித்தனர். அதோடு இல்லாமல் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் அவர்கள் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, வேப்பேரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பண்டிவேல் தலைமையிலான போலீசார் புரசைவாக்கம் டவுடன் சந்திப்பில் அதிரடி சோதனை நடத்தி ஆபத்தான முறையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை படித்து கடுமையாக எச்சரித்து கடிதம் எழுதி வாங்கி அனுப்பினர்.
முதல் நாள் என்பதால் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை மட்டும் செய்து அனுப்பி வைத்தனர். மீண்டும் படிக்கட்டு பயணம் செய்து சிக்கினால் சம்பந்தப்பட்ட மாணவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களை போக்குவரத்து போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபோன்ற சோதனை நடத்தப்படும், என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகரம் முழுவதும் அனைத்து பேருந்து நிறுத்தங்களில் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
*விழிப்புணர்வு :
சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார் அவரவர் காவல் எல்லையில் உள்ள பள்ளிகளில் மாணவர்களிடையே படிக்கட்டு பயணம் ஆபத்தானது என்று கூறி விழிப்புணர்வு எற்படுத்தினர்.
*தாக்குதல் :
கடந்த வாரம் மட்டும் சென்னை மாநகரில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை கண்டித்த 3க்கும் ேமற்பட்ட போக்குவரத்து ஊழியர்களை மாணவர்கள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற பிரச்னையால் காலை மற்றும் மாலை நேரங்களில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
Tags:
#மாணவர்கள்
# மாநகர பேருந்து
# வழக்கு
# போக்குவரத்து போலீசார்