ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக அரசியல் ரீதியில் செயல்பட்டு வந்தவரும், எதிர்கட்சி தலைவராகவும் செயல்பட்டு வந்த அலெக்ஸி நவல்னி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார் என சனிக்கிழமை அன்று ரஷ்ய சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.
அலெக்ஸி நவல்னி தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுப்பட்டதாக கூறி அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு கடும் குளிர் நிறைந்த ஆர்டிக் பகுதி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிறையில் இருந்த நவல்னியின் திடீர் மரணம் ரஷ்யா மட்டுமின்றி உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ரஷ்யாவில் பல்வேறு இடங்களில் நவல்னியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தியும், கைது நடவடிக்கையும் தொடர்ந்தது. நேற்று முன்தினம் சமூக வலைதள நேரலையில் நவல்னி மனைவி உரையாற்றினார். அதில் தனது கணவர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும். அதன் வெளிப்படை தன்மையை ரஸ்யா வெளிப்படுத்த வேண்டும் என்றும்.அதிபர் புதின் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் பல்வேறு குற்றசாட்டுக்களை கூறினார்.
இந்நிலையில், தற்போது வெளியான தகவலின்படி, உயிரிழந்த அலெக்ஸி நவல்னியின் சகோதரர் ஒலெக் நவல்னி (Oleg Navalny) மீது ரஷ்ய காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், தற்போது அவரை காவல்துறை தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எந்த வழக்கின் கீழ் அவர் தேடப்பட்டு வருகிறார் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு ஒரு மோசடி வழக்கில் ஒலெக் நவல்னி கைது செய்யப்பட்டு அவருக்கு 3.5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.