பள்ளிகளுக்கு குழந்தைகளை ஆட்டோக்களில் அழைத்துச் செல்வதை ஏற்க முடியாது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்த சுயம்புலிங்கம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
கல்வி நிறுவனங்களுக்கான வாகன விதி சட்டம் கடந்த 2012ல் அமலானது. இச்சட்டப்படி, அரசு,தனியார் பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தியிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகள் உள்ளன. ஆனால் விதிகளை மீறி, வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் ஏற்றப்படுகின்றனர். வாகனங்களை முறையாக பராமரிப்பதில்லை.
பல வாகனங்களில் கல்வி நிறுவனத்தின் பெயர் இல்லை. வாகனத்தில் வரும் மாணவர்களை கண்காணிக்க பல வாகனங்களில் நடத்துநர் பணியில் இல்லை. கல்வி நிறுவனங்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுகின்றன. எனவே, வாகன விதிகளை முறையாக பின்பற்றவும், இது தொடர்பான நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டுமென்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் வாகன விதிகளை ஒரே மாதிரியாக பின்பற்ற வேண்டும்.
குழந்தைகளை பள்ளிகளுக்கு ஆட்டோக்கள் மற்றும் ரிக்சாகளில் எவ்வாறு அனுப்புகின்றனர்? இதை பள்ளி நிர்வாகங்கள் எவ்வாறு ஏற்கின்றன? இதுபோன்ற செயல்களை நீதிமன்றம் ஏற்காது. பள்ளி வாகனங்களுக்கு என பல விதிகள் உள்ளன. ஆனால் ஆட்டோ மற்றும் ரிக்சாக்களுக்கு என்ன விதிகள் உள்ளன. ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்களை அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்பற்றுமாறு உத்தரவிட வேண்டும். இது தொடர்பான அரசின் விளக்கத்தை பள்ளிக்கல்வித்துறை தரப்பில் பெற்று தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 3 வாரம் தள்ளி வைத்தனர்.
Tags:
#பள்ளி வாகனங்கள்
# ஐகோர்ட் கிளை
# நீதிபதிகள்
# ஆட்டோ