நாமக்கல் நகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொது வெளியில் தண்ணீர் நிரம்பிய பகுதியில் ஆயில்பந்து வீசப்பட்டு, கொசு உற்பத்தி தடுக்கப்பட்டு வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக தொடர் மழை பெய்தது. கடந்த 4 நாட்களாக மழை சற்று தணிந்துள்ளது. இருப்பினும், வடகிழக்கு பருவமழை இன்று(29ம் தேதி) முதல் துவங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி தலைமையில், சுகாதாரப்பிரிவு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நகரில் உள்ள பழைய காயிலான் கடைகளில், சுகாதார ஆய்வாளர்கள் குழு ஆய்வு செய்து, கொசுப்புழுவை ஒழிக்க திறந்தவெளியில் தண்ணீர் தேங்கி நிற்பதை தடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
நல்ல தண்ணீரில் தான் டெங்குவை பரப்பும் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் என்பதால், காயலான் கடைகளில் உள்ள பழைய இரும்பு சாமான்களில் நீர் நிரம்பி இருந்தால், அதை வெளியேற்றும்படி அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், டெங்கு கொசுக்கள் உற்பத்தி செய்தால் ₹10 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர். நகரில் பொது இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில், ஆயில் பந்து வீசப்பட்டுள்ளது. தண்ணீரில் இந்த ஆயில் பந்துவை வீசுவதன் மூலம், கொசுப்புழுக்களை எளிதில் அழித்து விடமுடியும்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் சுதா கூறியதாவது:
கலெக்டரின் அறிவுரைப்படி, டெங்கு தடுப்பு நடவடிக்கை நகரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களை உருவாக்கும் கொசு புழுக்கள் உள்ளதை ஆய்வு செய்து, கண்டறிந்து அவற்றை அழிக்கும் பணி நடந்து வருகிறது. நகரில் டெங்கு பரவாவண்ணம் தொடர் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாமக்கல் நகராட்சி பகுதியில் மழைநீர் பெருமளவில் தேங்கியுள்ள பகுதிகளில் கொசு புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க, 37வது வார்டு கணபதி நகர் மற்றும் 5வது வார்டு சின்னமுதலைப்பட்டி காதி போர்டு காலனி உள்ளிட்ட 10 இடங்களில், ஆயில் பந்துகள் வீசப்பட்டுள்ளது.
இந்த ஆயில் பந்துகள் வீசுவதன் மூலம், மழைநீரில் கொசுப்புழுக்களின் உற்பத்தியை முற்றிலுமாக அழிக்கமுடியும். மேலும், தொடர்ந்து பெருமளவில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில், நகராட்சி பணியாளர்கள் மூலம் ஆயில் பந்துகள் வீசப்படும். பொதுமக்கள் குடிதண்ணீரை நன்கு கொதிக்க வைத்து பயன்படுத்தவேண்டும். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு வீடு தேடி வரும் பணியாளர்களுக்கு, உரிய ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு ஆணையாளர் சுதா தெரிவித்தார்.
Tags:
#கொசு உற்பத்தி
# ஆயில் பந்து
# டெங்கு