புதுச்சேரியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க மாநில அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் அனுமதியோடு தொழில் துறை சார்பு செயலாளர் முத்துமீனா பிறப்பித்துள்ள ஆணையில் இந்திய தொழில் கூட்டமைப்பு கோரிக்கையின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறை அடுத்த 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் இந்த விதி 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் ஊழியர்கள் எந்த நாளிலும் 8 மணிக்கு மேல் வேலை செய்ய தேவை இல்லை. இருப்பினும் அவர்களின் எழுத்து பூர்வ ஒப்புதல் பெற்ற பின்னர் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பணி புரிய அனுமதிக்கலாம் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. பெண் ஊழியர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஊழியர்களிடம் விடுமுறையிலோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக நேரம் வேலை செய்யவோ நிர்பந்திக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:
#வணிக நிறுவனங்கள்
# மாநில அரசு
# புதுச்சேரி