நன்கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்களின் விவரத்தை தெரிவிக்க இணையதளம்: உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆணை..!

நன்கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்களின் விவரத்தை தெரிவிக்க இணையதளம்: உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆணை..!
By: TeamParivu Posted On: October 31, 2022 View: 50

கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


மாநில அரசுகளின் சட்டங்கள், நன்கொடை வசூலிப்பதை தடுப்பதில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நன்கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்களின் விவரத்தை தெரிவிக்க இணையதளத்தை உருவாக்கவும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.

வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் அறக்கட்டளையின் பெயரில் வசூலித்த நன்கொடைகளுக்கு வருமானவரித்துறை அதிகாரி வரிவிதித்து உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் நன்கொடைக்கு வரி வசூலிக்க முடியாது எனக்கூறி மதிப்பீட்டு அதிகாரி உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து வருமானவரித்துறை தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மகாலிங்கம் மற்றும் முகமது ஷபிக் அமர்வு, கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், இந்த சட்ட விதிகள் மீறி நன்கொடை வசூலித்ததுடன் அதற்கு வரிவிலக்கு பெற முயற்சித்ததாகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இத்தொகையை நன்கொடை என ஆதாரத்தின் மூலமாக மதிப்பீட்டு அதிகாரிகள் நிரூபித்துள்ளதாக கூறி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்த நீதிபதிகள், கல்வி நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை தொகைக்கான வருமான வரியை கணக்கிட்டு வசூலிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர்.

கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால் முந்தய மதிப்பீட்டு ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி கணக்குகளை மதிப்பீட்டு அதிகாரி ஆதாரங்கள் மற்றும் சட்டத்திற்குட்பட்டு மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.   

மேலும் நன்கொடை இல்லாமல் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நன்கொடை வசூலை தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இணையதளத்தை உருவாக்கி எந்தெந்த கல்லூரிகள் நன்கொடை வசூலிக்கிறது என மாணவர்களும், பெற்றோர்களும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அந்த இணையத்தளம் தேசிய தகவல் மையத்தால் இயக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags:
#நன்கொடை  # கல்வி நிறுவனம்  # உயர்நீதிமன்ற நீதிபதிகள் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..