சென்னை தலைமைச் செயலகத்தில் தனது அறையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாடு அமைச்சரவையில் தங்கம் தென்னரசுக்கு அடுத்து 10வது இடத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். சிறப்பு திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு திட்டங்கள், ஊரகக்கடன்கள் துறையும் உதயநிதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சராக பொறுப்பேற்ற பின், கோப்புகளில் உதயநிதி கையெழுத்திட்டார். உதயநிதி ஸ்டாலினுக்கு மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, மூர்த்தி, மெய்யநாதன், மா.சுப்பிரமணியன் மற்றும் பல அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக அறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மெரினா கடற்கரைக்கு வருகை தந்த உதயநிதிக்கு தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Tags:
#தலைமைச்செயலகம்
# இளைஞர்நலத்துறைஅமைச்சர்
# உதயநிதிஸ்டாலின்