கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்காவிடில் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை என போலீஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி கடந்த ஜூலை மாதம் மரணமடைந்ததை தொடர்ந்து பள்ளிக்கு எதிராக கலவரம் நடைபெற்று, சூறையாடப்பட்டதால் பள்ளி மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன மகளின் மரணத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் என மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது மாணவி விடுதியில் தங்கியிருக்கும்போது பயன்படுத்திய செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டு விசாரணைக்கு வந்தபொழுது காவல்துறை தரப்பிலிருந்து மாணவியின் பெற்றோருக்கு செல்போனை ஒப்படைக்க பலமுறை சம்மன் அனுப்பியும் இதுவரை ஒப்படைக்கவில்லை எனவும் செல்போனை ஒப்படைத்தால்தான் விசாரணை முழுமையாக நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. விசாரணை முடிவடைவதற்கு 2 மாத கால அவகாசம் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதே சமயம் தனது மகள் விடுதியில் செல்போனை வைத்திருக்கவில்லை எனவும், விடுதியின் காப்பாளரின் செல்போனை தான் பயன்படுத்தியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை பிரமானபத்திரமாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
அதே சமயம் செல்போனை மாணவி பயன்படுத்தியிருந்தால் அதனை பெற்றோர்கள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும் செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்காவிடில் பெற்றோரை விசாரிக்க நேரிடும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் முதல் வாரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Tags:
#கள்ளக்குறிச்சி
# மாணவி
# செல்போன்
# உயர்நீதிமன்றம்