பொங்கலுக்கு முன் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில், இலவச மின் இணைப்பு செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், விவசாய பயன்பாட்டிற்காக கடந்த மாதம் 50,000 இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதில், தற்போது, 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 15,866 விவசாயிகளுக்கு பொங்கலுக்கு முன் மின் இணைப்பு முழுமையாக வழங்கப்பட்டுவிடும். ஒன்றரை ஆண்டுகளில் 1.50 லட்சம் மின் இணைப்பு நிறைவு பெற போகிறது என்று கூறினார்.
இதுவரை 1.2 கோடி பேர் ஆதார் எண் இணைப்பு:
இதுவரை 1 கோடியே 20 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஆன்லைன் மூலமாக 58 லட்சம் பேர் ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைத்துள்ளனர். மொத்தம் 2.67 கோடி மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும். இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்கவும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் விரிவாக பேச விரும்பவில்லை என கரூர் ஊராட்சி துணை தலைவர் தேர்தல் விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.
அண்ணாமலைக்கு கெடு:
அண்ணாமலை தான் வாங்கிய கைக் கடிகாரத்திற்கான ரசீதை இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேடு விதித்துள்ளார்.அண்ணாமலை வாங்கிய கைக் கடிகாரத்திற்கு ரசீது இருந்தால், வெளியிட வேண்டியதுதானே எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி சாடியுள்ளார்.
Tags:
#மின்இணைப்பு
# விவசாயிகள்