கொரோனா காலத்தில் மருத்துவ தேர்வு ஆணையத்தின் மூலம் தற்காலிகமாக பணியாற்றிய தங்களுக்கு அதே மருத்துவத் தேர்வாணையத்தின் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சேலத்தில் மூன்று நாட்களாக செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் அமைதியான முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை நேற்று மாலை நேரத்தில் காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
எத்தனை கெடுபிடிகள் காவல்துறையினர் கொடுத்தாலும் தங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்று செவிலியர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு செவிலியர்களை எழுப்பிய காவல்துறையினர் அவர்களை மண்டபத்திலிருந்து வெளியேற்றினர். இருப்பினும், காவல்துறை கொண்டு வந்த பேருந்தில் ஏற மறுத்து செவிலியர்கள் நடந்து சென்றனர்.
வழியெங்கும் முழக்கங்கள் எழுப்பியபடி சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்றனர். கலைந்து சென்ற செவிலியர்கள் போராட்டத்தை தொடருவோம் என அறிவித்தனர். இந்த நிலையில் மாற்று வழியில் போராட்டம் நடக்கும் என சேலத்தில் செவிலியர்கள் அறிவித்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகமே கொரோனா பெருந்துதொற்று நெருக்கடியான நேரத்தில் தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் பணியில் சேர்ந்த ஒப்பந்த செவிலியர்கள் தான் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தை முற்றுகையிட்டு தற்போது உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 2019-ம் ஆண்டு காலகட்டத்தில் மருத்துவ தேர்வாணையத்தின் மூலமாக கொரோனா காலகட்டத்தில் பணியில் சேர்ந்துள்ளனர். இரண்டு வருடம் 7 மாதங்கள் பணியில் இருந்து இருக்கிறார்கள். ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றிய செவிலியர்களை பணிநீக்கம் செய்து தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் போராட்டத்தில் செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனையில் தலையிட்டு எங்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று செவிலியர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:
#செவிலியர்கள்
# பணிநிரந்தரம்
# போராட்டம்