வெளியூர் செல்லும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் 5 பேருந்து நிலையங்களை இணைக்க 340 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை யொட்டி சென்னையில் 6 இடங்களில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகை யையொட்டி ஜன.13ம் தேதி வழக்கமான பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 1,855 சிறப்பு பேருந்துகளும் மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 2,214 பேருந்துகளும் ஜன. 14ல் சென்னையில் இருந்து 1,943 சிறப்பு பேருந்துகளும் மற்ற இடங்களில் இருந்து 2,461 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. கோயம்பேடு, கே.கே.நகர், மாதவரம், தாம்பரம் மெப்ஸ், ரயில் நிலையம் மற்றும் பூந்தமல்லி ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் இடங்களுக்கு செல்ல ஏதுவாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 24 மணி நேரமும் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
மேலும் சிறப்பு பேருந்துகளில் பயணிக்க 12 முன்பதிவு மையங்களிலும், tnstc செயலி மற்றும் www.tnstc.in என்ற இணையதளம் ஆகியவற்றின் மூலம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1.50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்த புகார்கள் தெரிவிக்க 1800 425 6151, 044- 2474 9002, 044-2628 0445, 044-2628 1611 ஆகிய கட்டணமில்லாத தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு உதவ 20 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் முழுமையாக நிரம்பினால்கூட கூடுதலாக பேருந்துகள் இயக்கவும் தயாராக உள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதன்படி சென்னை மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழியாகவும் கே.கே.நகர் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் பேருந்துகள் கத்திப்பாரா பாலம் எஸ்.வி.படேல் ரோடு, கிழக்கு கடற்கரை சாலைவழியாக இயக்கப்படும். தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாகவும் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாகவும் செல்ல வேண்டும்.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் செல்லும். இதுகுறித்து போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளதாவது; அனைத்து பயணிகளும் போக்குவரத்து காவல் துறை செய்துள்ள ஏற்பாடுகளை கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு, அனைத்து சாலைகளிலும் சீரான போக்குவரத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சிறப்பு இயக்க பேருந்து நிலையங்களுக்கு பயணிக்க மாநகர போக்குவரத்து கழகம் சிறப்பு இணைப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோயம்பேட்டில் இருந்து அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளும் தாம்பரம், பெருங்களத்தூரில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்ல பூந்தமல்லி சாலை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு செல்லும். வழக்கம்போல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகள் பூந்தமல்லி சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் அடையும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது. இதேபோல் கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பூந்தமல்லி சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் அடைய வேண்டும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது.
கிழக்கு கடற்கரை சாலை நோக்கி ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, கத்திப்பாரா, கிண்டி, சர்தார் படேல் சாலை வழியாக போக்குவரத்து காவல்துறையின் ஒப்புதலுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும். ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, பூந்தமல்லி சாலை, சிஎம்ஆர்எல், ஆலந்தூர் மெட்ரோ, கே.கே.நகர் ஆகிய இடங்களில் ஏறும் இடங்களை தவிர்க்க வேண்டும், அதற்குப் பதிலாக அந்த பயணிகளை கோயம்பேடு அல்லது ஊரப்பாக்கத்தில் இருந்து ஏற்றிச்செல்லலாம். கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு அல்லது பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லவேண்டும். அனைத்து பயணிகளும் சென்னை போக்குவரத்து காவல்துறையின் ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
Tags:
#பொங்கல்
# சிறப்புபஸ்கள்
# போக்குவரத்துத்துறை