ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ல் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்த அனைத்து ஊழியர்களுக்கும் 27ல் ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. அவர் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவின் தென்னரசு, தேமுதிகவின் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மேனகா ஆகியோர் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் வருகை தந்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ல் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஈரோடு கிழக்கு தொகுதியின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் பிற பகுதிகளில் பணிபுரியும் பட்சத்தில் அவர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:
#ஈரோடு
# விடுமுறை
# கல்விநிறுவனங்கள்
# தமிழ்நாடுஅரசு