சென்னையில் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்காக சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியுள்ளது.
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 80 உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்கள், 48 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் என மொத்தம் 128 ரயில் நிலையங்களுடன் கட்டப்பட்டு வருகின்றன.
இதில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் பாதை அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் மூலமாக பயணிக்கும் வகையில் திட்டம் வடிவைமைக்கப்பட்டுள்ளது. பசுமை வழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைக்க இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொண்டுவரப்பட்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பொருத்தும் பணியும் நிறைவடைந்து சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியுள்ளது.
ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள அடையாறு ஆற்றின் அடியில் ஒரு நாளைக்கு 10 மீட்டர் அளவுக்கு சுரங்கம் தோண்டப்படும் நிலையில் 100 நாட்களுக்குள் ஆற்றின் அடிப்பகுதியில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:
#மெட்ரோரயில்
# சுரங்கம்
# சென்னை