நீட் தேர்வு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சூட் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கடந்த 2017, 2018ம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சிலின் சட்ட திருத்தத்தால் மருத்துவ படிப்புக்கு சேர தமிழக கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இது புள்ளி விவரங்களோடு உறுதியாகியுள்ளது. அதனால் அந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் நீதிபதிகள் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார்.
அதில், ‘‘தமிழகத்தில் நீட் தேர்வினால் என்னென்ன பிரச்னைகள் உள்ளது. அதனால் ஏற்படும் பாதிப்புகள், ஆகியவை குறித்து உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த ஆய்வில் நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிப்படைவது உறுதியாகியது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவதற்காக, “மருத்துவ படிப்புகளுக்கான தமிழ்நாடு மாணவர் சேர்க்கை 2021” என்ற மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அது ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேப்போன்று தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மசோதாவும் தற்போது வரையில் ஜனாதிபதி முன்பு பரிசீலனையாக நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கை ஆறு மாதம் ஒத்திவைக்க வேண்டும்.
இதுகுறித்த விவரங்கள் அடங்கிய கடிதமும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு சூட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘நீட் தேர்வு என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. எனவே நீட் தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும். அந்த தீர்ப்பு மாநிலத்தை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
#நீட்தேர்வு
# தமிழகஅரசு
# உயர்நீதிமன்றம்