தமிழக முதல்வர் பற்றி அவதூறாக முகநூலில் பதிவிட்டு கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ஈரோடு போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசியை சேர்ந்தவர் நாட்டாரலிங்கம். இவரது மகன் ஞானசேகரன்(31). பொறியியல் பட்டதாரியான இவர் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக உள்ளார்.
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் பதிவிட்டிருந்தார். மேலும் அருந்ததியர் சமூக மக்கள் பற்றி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சரியானது எனவும் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் ஞானசேகரன் மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புதல், மோதல் உருவாக்குதல், கொலைமிரட்டல், எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஞானசேகரனை ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் நேற்று கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Tags:
#முதல்வர்
# நாம்தமிழர்கட்சி
# கொலைமிரட்டல்