7 ஊர்களில் புதிய பேருந்து நிலையங்கள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

7 ஊர்களில் புதிய பேருந்து நிலையங்கள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!
By: TeamParivu Posted On: February 27, 2023 View: 118

 7 ஊர்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.93 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர்  கடந்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், 24 புதிய பேருந்து நிலையங்கள் ரூ.302.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளார். நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து, கீழ்க்காணும் உள்ளாட்சி அமைப்புகளில் 24 புதிய நவீன பேருந்து நிலையங்கள் ரூ.302.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது:-

“திருப்பூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகள், திருவள்ளூர், வடலூர், சிதம்பரம், பேர்ணாம்பேட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம், லால்குடி, துறையூர், அரியலூர், பொள்ளாட்சி, ஆற்காடு, மேலூர், உசிலம்பட்டி, கூடலூர், ராமநாதபுரம், திருச்செந்தூர், சாத்தூர், கொளச்சல், மேட்டூர், எடப்பாடி ஆகிய நகராட்சிகள் மற்றும் சாயர்புரம், திருவட்டார் ஆகிய பேரூராட்சிகள்”.

மேற்காணும் அறிவிப்பினைத் தொடர்ந்து, அரசாணை (நிலை) எண்.173, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல், கடந்த ஆண்டு டிசம்பர் 08ல் ரூ.115.37 கோடி மதிப்பீட்டில் “திருப்பூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகள், கூடலூர், அரியலூர், வடலூர், வேதாரணயம், மேலூர், பட்டுக்கோட்டை, கொளச்சல் மற்றும் பொள்ளாச்சி” ஆகிய நகராட்சிகளில் பேருந்து நிலையங்கள் கட்ட நிருவாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசாணை (நிலை) எண்.28, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பிப்ரவரி 22ல் ரூ.93.40 கோடி மதிப்பீட்டில் ஆற்காடு, எடப்பாடி, ராமநாதபுரம், திருவள்ளூர், மேட்டூர், சிதம்பரம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய நகராட்சிகளில் பேருந்து நிலையங்கள் அமைக்க அரசால் நிருவாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்குவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிச்சலை குறைக்கும் பொருட்டு, உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.162.90 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை (நிலை) எண்.27, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள் பிப்ரவரி 22ல் அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிதியிலிருந்து, கோயம்புத்தூர் மாநகராட்சியில் வெள்ளத் தடுப்பு கால்வாய், திருச்சி மாநகராட்சியில் ரூ.34.10 கோடியில் மாரீஸ் திரையரங்கம் அருகில் இரயில்வே பாலமும், திருப்பூர் மாநகராட்சியில் ஈஸ்வரன் கோவில் அருகில் பாலமும், நடராஜர் திரையங்கம் அருகில் உள்ள பாலத்தினை விரிவாக்கம் செய்தல், கும்பகோணம் மாநகராட்சியில் ஓலைப்பட்டிணம் கால்வாயினை தூர்வாரி சீரமைத்தல், கரூர் மாநகராட்சியில் உள்ள மோகனூர் வாங்கல் சாலையை மேம்படுத்துதல், தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் வடிகால் கட்டுதல் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சியில், காலவர் கேட்டருகில் தார்சாலை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Tags:
#பேருந்துநிலையங்கள்  # அரசாணை  # தமிழகஅரசு 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..