நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற கல்வி நிறுவனங்களுக்கான கட்டிட வரன்முறை கால அவகாசம் ஜுன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் கடந்த 2011ம் ஆண்டும் ஜனவரி 1ம் தேதிக்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் கடந்த 2018ம் ஆண்டும் ஜுன் 14ம் தேதி வெளியிடப்பட்டன.
அதன்படி, இத்திட்டத்தின் கீழ் நிகழ்நிலை ஆன்லைனில் கடந்த ஜுன் 6ம் தேதி முதல் 2018 செப்டம்பர் 13ம் தேதி வரை மூன்று மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு சென்னை உயர்நீதி மன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ரிட் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் பலவற்றில் வழங்கப்பட்டுள்ள கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி முதல் 2021ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி வரை இருவார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு தமிழ்நாடு அரசால் கடந்த 2022ம் ஆண்டு ஜுன் 24ம் தேதி முதல் 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை வழங்கப்பட்டன.
அதன்படி, தற்பொழுது இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக வரும் ஜுன் 30 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், விண்ணப்பித்தவர்கள் உரிய விபரங்களை சமர்ப்பித்து ஒப்புதல் பெற சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகலாம். மேலும், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. இவை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:
#கல்விநிறுவனங்கள்
# கட்டிடவரன்முறை
# ஊரமைப்பு