குட்காவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் குட்கா நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா போன்ற பொருள்களுக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது புகையிலை நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடை சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டு அரசு சார்பில் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி வாதங்களை முன்வைத்தார்.
தமிழகத்தை பொறுத்தவரையில் பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அவற்றிக்கு தடைவிதிக்க முடிவெடுத்து அரசாணை பிறப்பித்தது. அந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் சாராம்சத்தை கருத்தில் கொள்ளாமல் விசாரணை நடத்தி ஒருசார்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் குட்கா மற்றும் பான்மசாலா நிறுவனங்கள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை மார்ச் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
Tags:
#குட்கா
# ஐகோர்ட்
# உச்சநீதிமன்றம்