மின்சாரம் யூனிட் ஒன்றிற்கு 8.50 ரூபாயில் பெற டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

மின்சாரம் யூனிட் ஒன்றிற்கு 8.50 ரூபாயில் பெற டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி..!!
By: TeamParivu Posted On: March 07, 2023 View: 66

மின்சாரம் யூனிட் ஒன்றிற்கு 8.50 ரூபாயில் பெற டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று (07.03.2023), தமிழ்நாட்டில் எதிர்வரும் கோடை காலத்தில் பொதுமக்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் .ரா.மணிவண்ணன், அனைத்து இயக்குநர்கள், தொடர்புடைய தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஆய்வின் போது, தமிழ்நாட்டில் அனல், புனல், காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தின் அளவு பற்றி மின்துறை அமைச்சர் கேட்டறிந்தார். நடப்பாண்டில் தமிழ்நாட்டின் அதிகபட்ச மின் நுகர்வு 17,584 மெகாவாட் ஆக 04.03.2023 அன்று பதிவாகியுள்ளது. இந்த அளவு கடந்த ஆண்டில் 29.04.2022 அன்று பதிவான 17,563 மெகாவாட்டை விட 21 மெகாவாட் கூடுதலாகும். இந்த கூடுதலான மின் நுகர்வையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது எவ்வித தடங்கலுமின்றி எதிர்கொண்டது.

வரக்கூடிய நாட்களில் மின்நுகர்வு இன்னும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், அதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு 24x7 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தினை வழங்குவது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தற்போதைய மின்தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டிலிருந்து 18,100 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம். வருகின்ற மே மாதத்தில் 17,400 மெகாவாட் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் 2022-ல் பகல் நேரத்தில் 17,196 மொகாவட்டாக இருந்த மின் பயன்பாடு மார்ச் 2023-ல் 18,100 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2022-ல் 17,563 மொகாவட்டாக இருந்த மின் பயன்பாடு ஏப்ரல் 2023-ல் 18,500 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், கடந்த மே 2022-ல் 16,750 மெகாவாட்டாக இருந்த மின் பயன்பாடு மே 2023-ல் 18,000 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடைகால உச்சபட்ச மின் தேவையான 18,500 மெகாவாட்டினை பூர்த்தி செய்வதற்கு அனல், புனல் மின் நிலையங்கள், மாநில மற்றும் ஒன்றிய தொகுப்புகளின் மூலம் 8,959 மெகாவாட்டும், தமிழ்நாட்டிலுள்ள காற்றாலைகள் மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 4,750 மெகாவாட்டும், நீண்ட மற்றும் நடுத்தர கால கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் தினசரி 2,752 மெகாவாட்டும், மின் உற்பத்தி அதிகமாக இருக்கும் காலங்களில் மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை பரிமாற்ற முறையின் கீழ் வெளி மாநிலங்களுக்கு கொடுத்ததன் அடிப்படையில் 650 மெகாவாட்டும், கோடை காலத்தில் மின் கொள்முதல் சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.12 முதல் ரூ.20 வரை இருந்ததை கருத்தில் கொண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு குறுகியகால ஒப்பந்தப்புள்ளி மூலம் இந்த ஆண்டு 1,562 மெகாவாட் மின்சாரம் யூனிட் ஒன்றிற்கு ரூ8.50 என்ற விலையில் பெறுவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ரூ.1,312 கோடி சேமிப்பு கிடைக்கப் பெறும். மேலும், தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுவது குறைக்கப்பட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சொந்தமான அனல் மற்றும் புனல் மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சொந்தமான அனல் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பிப்ரவரி 2022 வரை 18,535 மில்லியன் யூனிட்டுகளாக பெறப்பட்ட மின்சாரம், இந்த ஆண்டு பிப்ரவரி 2023 வரை 20,307 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. அதாவது 1,772 மில்லியன் யூனிட்டுகள் கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இது 9.5 சதவீதம் அதிமாகும். இதேபோல், புனல் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்பட்ட மின்சாரமானது 5,139 மில்லியன் யூனிட்டுகளிலிருந்து 5,905 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவை விட 10 சதவீதத்திற்கும் கூடுதலாகும். நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இயக்கத்தில் உள்ள 5 அனல் மின் நிலையங்களின் நிலக்கரி கையிருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டதில் தற்சமயம் 5 அனல் மின் உற்பத்தி நிலையங்களிலும் சேர்த்து மொத்தம் 7,99,124 மெட்ரிக் டன் நிலக்கரி 11 நாட்களுக்கு கையிருப்பில் இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்த நிலக்கரியின் கையிருப்பு அளவு 1,82,555 மெட்ரிக் டன் மட்டுமே. இது சென்ற ஆண்டை விட, 6,16,569 மெட்ரிக் டன் கூடுதலாகும்.

கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலான நிலக்கரியினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு இறக்குமதி செய்வதற்கு ஏதுவாக மார்ச் 2023-ல் அதிக கொள்ளவு கொண்ட 12 பெரிய கப்பல்கள் மூலம் நிலக்கரியினை கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, தமிழ்நாட்டின் கோடைகால மொத்த மின்தேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு கோடைகாலத்திலும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து நடவடிக்கைளையும் எடுத்திருக்கிறது. மின்வெட்டுஇல்லா மாநிலமாக தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது பொறுத்தவரை, இப்பணியானது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் 15.11.2022 முதல் Online மூலமாகவும், 28.11.2022 முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் மூலமாகவும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. பணிகளை முடிப்பதற்கு முதற்கட்டமாக 31.12.2022 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க காலக்கெடுவானது 31.01.2023, 15.02.2023 மேலும் இறுதியாக 28.02.2023 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது. 266.87 இலட்சம் மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைத்திருக்கிறார்கள்.

இன்னும் 67,275 மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டியுள்ளது. மொத்தமுள்ள 267.55 இலட்சம் மின் நுகர்வோர்களில் ஆதார் இணைக்கப்பட்ட சதவீதம் 99.75 சதவீதம் ஆகும். தற்பொழுது, தமிழ்நாட்டில் பள்ளி ஆண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால், அனைத்து பள்ளிகளுக்கும் மின்சாரம் எவ்வித தடங்கலுமின்றி வழங்குவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆண்டு தேர்வுகள் முடிவுற்ற பின் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் விதமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் அவர்களால் 20.06.2021 அன்று துவக்கி வைக்கப்பட்ட மின்னகம் மின் நுகர்வவோர் சேவை மையம் மூலம் இதுவரை 14,47,975 புகார்கள் பெறப்பட்டு, அவற்றுள் 14,41,640 புகார்களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. தீர்வு சதவீதம் 99.56%. கடந்த 2022 ஆண்டு மே மாதம் முதல் மேற்கொண்ட சிறப்பு மின் பராமரிப்பு பணிகளினால் மின்னகம் மூலம் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.

Tags:
#மின்சாரம்  # டெண்டர்  # செந்தில்பாலாஜி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..