நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி ஒட்டிய வனப்பகுதியில் கடந்த இரு மாதத்திற்கு முன்பு தூக்கிட்டு இறந்த நிலையில் முதியவர் சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக, குன்னூர் வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, குன்னூர் பேருந்து நிலைய பகுதியில் சுற்றித்திரிந்த எம்ஜிஆர் என்ற ராஜேந்திரன் (70) என்பவர் நீண்ட காலமாக காணாமல் போனது தெரியவந்தது. எனவே இறந்துபோனது அவர்தான் என நினைத்து போலீசார் உடலை ராஜேந்திரனின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தனியார் அறக்கட்டளையின் உதவியுடன் இறுதி சடங்கு செய்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று திடீரென குன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் எம்ஜிஆர் ராஜேந்திரனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்டவர் எப்படி உயிருடன் வந்தார்? என அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது, கேரளாவுக்கு சென்று நீண்ட காலம் அங்கேயே தங்கிவிட்டதாக தெரிவித்தார். நீண்ட காலமாக திரும்பி வராததால் அவர் என்று நினைத்து வேறு ஒருவரை அடக்கம் செய்துள்ளனர்.
உயிருடன் வந்த ராஜேந்திரனை குன்னூர் பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். போலீஸ் விசாரணையில் தூக்கிட்டு இறந்தவர் யார்? என்று தெரியாமல் உடலை மாற்றி ஒப்படைத்த சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
#குன்னூர்
# முதியவர்