பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூன்றாம் பெருந்திட்டத்திற்கான கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு சென்னை பெருநகரின் மூன்றாம் பெருந்திட்ட தொலைநோக்கு ஆவண விழிப்புணர்வு கையேட்டினை பொதுமக்களுக்கு வழங்கி, தங்கள் கருத்துகளை தெரிவிக்க வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் செல்வி அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, தலைமை திட்ட அமைப்பாளர் ரவிக்குமார், முதுநிலை திட்ட அமைப்பாளர் காஞ்சனா மாலா, உதவி திட்ட அமைப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை பெருநகர பகுதிக்கு மூன்றாவது பெருந்திட்டத்திற்கான (2026-2046) தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. சென்னை பெருநகரின் முதல் பெருந்திட்டம் 1976ம் ஆண்டும், இரண்டாம் பெருந்திட்டம் 2008ம் ஆண்டும் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், 1189 சதுர கி.மீ பரப்பிலான சென்னைப் பெருநகரப் பகுதிக்கு மூன்றாம் பெருந்திட்டத்தினை தயாரிக்க உள்ளது. இத்திட்டம் 2026ம் ஆண்டிலிருந்து செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது.
மூன்றாவது பெருந்திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரிக்க கலந்தாலோசகர் நியமிக்கப்பட்டு, சென்னை பெருநகரில் 29 மண்டலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தி, கருத்துகள் மற்றும் விருப்பங்கள் பெறப்பட்டது.
இதன் பொருட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள், திரை அரங்கங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், கல்லூரி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் நேரடியாகவும், வலைத்தள வாயிலாகவும் கருத்து கணிப்புகளை கேட்கும் முயற்சியினை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முன்னெடுத்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை ஒளிவருடல் வாயிலாகவும் மற்றும் இணைய வழி வாயிலாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:
#பெருநகரவளர்ச்சிக்கழகம்
# சேகர்பாபு