ஊட்டி அரசு மருத்துவமனையில் ஒத்திகை கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் 25 வென்டிலேட்டர்கள்..!!

ஊட்டி அரசு மருத்துவமனையில் ஒத்திகை கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் 25 வென்டிலேட்டர்கள்..!!
By: TeamParivu Posted On: April 12, 2023 View: 60

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு அதிகரித்தால் அதனை எதிர்கொள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி ஊட்டி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2020ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. ஏராளமானவர்கள் காய்ச்சலில் சிக்கி தவித்தனர். பல லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்த கொடிய தொற்று நோயால் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, நோயை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. அதேபோல், நோய் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.

பின், கடந்த ஆண்டு முதல் பாதிப்பு சற்று குறைந்தது. குறிப்பாக, இந்தியாவில் பாதிப்பு மிகவும் குறைந்தது. இதனால், பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பினர். இந்நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் தற்போது பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் இதனை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வார்டுகள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டு, அங்கு பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மருத்துவக் கல்லூரி முதல்வர் மனோகரி தலைமையில் இந்நிகழ்ச்சிகள் நடந்தது.

தொடர்ந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மனோகரி கூறியாதாவது: 

மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி, கொரோனா பாதித்தவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொள்ளபட்பட்டது. ஊட்டி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் தயார் நிலையில் உள்ளது. இதில், 45 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும், 25 ஆக்சிஜன் வென்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளுடன் கூடிய அறைகள் தயார் நிலையில் உள்ளது.மாவட்டம் முழுவதிலும் உள்ள மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருந்து மற்றும் மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளது. 

மேலும், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஒத்திகை நிகழ்ச்சியின்போது, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி உட்பட் மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:
#வென்டிலேட்டர்கள்  # மருத்துவமனை  # கொரோனா 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..