சென்னையில் சாலையோர வியாபாரிகளின் பெயர் பட்டியல் கடந்த 8ம் தேதி மாநகராட்சி ஆணையரால் வெளியிடப்பட்டது.
இப்பட்டியல் சாலையோர வியாபாரிகள் தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலரின் அலுவலகத்திலும், அனைத்து மண்டல அலுவலகங்களில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி வருவாய் அலுவலர்கள் அலுவலகத்தின் பெயர் பலகை மற்றும் மாநகராட்சி இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. அதன்படி, வரும் 17ம் தேதி முதல் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி, வரும் 28ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு சாலையோர வியாபாரிகளிலிருந்து 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு ரிப்பன் கட்டிட வளாகத்தில் மாநகராட்சி அலுவலர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு அருகில் அமைந்துள்ள சூர்யபிரகாஷ், தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் நகர விற்பனைக்குழு உறுப்பினருக்கான சாலையோர வியாபாரிகள் தேர்தல் ‘2023 அலுவலகத்தில் வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனு வரும் 19ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம். தேர்தல் நடத்தும் அலுவலரின் தொலைபேசி எண்.94999 33102.
தமிழ்நாடு தெருவோர வியாபாரிகளின் விதிகளின்படி முன்வைப்பு தொகையாக ரூ.2,000 ரொக்கமாகவோ அல்லது வங்கி வரைவோலையாகவோ அல்லது பண விடையாகவோ வேட்பு மனுவுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் தாமாகவோ அல்லது அவரது முன்மொழிபவர் மூலமாகவோ அல்லது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இரண்டாவது முன்மொழிபவர் மட்டும் வரும் 19ம் தேதி நேரில் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பு மனுவுடன் தெருவோர வியாபாரிகளுக்கான சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டைநகல், ஆதார் அடையாள அட்டை நகல் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர்,
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் என குறிப்பிட்ட வகைப்பாட்டிற்கான ஆதார சான்றிதழ்கள் நகல்கள், வேட்பாளரின் பாஸ்போர்ட் அளவு இரண்டு புகைப்படம் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், பெறப்படும் வேட்பு மனுக்கள், வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் முன்னிலையில் வரும் 20ம் தேதி காலை 10 மணி முதல் பரிசீலனை செய்யப்பட்டு மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு, வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு செய்யப்பட்டு 28ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவு அறிவிக்கப்படும்.
Tags:
#சாலையோரவியாபாரிகள்
# சென்னைமாநகராட்சி