சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீச்சல் குளங்களில் பயிற்சி பெற புதிய கட்டுப்பாடுகளை விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரை, திருவொற்றியூர், பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க, பல்வேறு நிபந்தனைகளை விதித்து, ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, கோடை காலம் மற்றும் பள்ளி விடுமுறை என்பதால், பல்வேறு இடங்களில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பெரியமேடு பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் சமீபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீச்சல் குளங்களில் பயிற்சி பெறுவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. அதில், நீச்சல் பயிற்சி பெற 8 வயது நிரம்பி இருக்க வேண்டும். சிறுவர்கள் குளிக்கும்போது, பெற்றோர் உடனிருக்க வேண்டும். செல்லப் பிராணிகளை உடன் அழைத்து வரக்கூடாது. சிசிடிவிகேமரா பொருத்த வேண்டும், பயிற்சியாளர்கள் திறன் பெற்றவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை மாநகராட்சி விதித்து, மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ள நீச்சல் குளங்களை பராமரிப்பவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘நீச்சல் குளங்களில் பி.எச்.அளவை சரிபார்த்தல், டைல்ஸ், பாதுகாப்பு உபகரணங்கள், பயிற்சியாளர்கள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவற்றை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்வார்கள். மெரினா நீச்சல் குளம் திறக்கப்பட்டு பாதுகாப்பு குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. திருவொற்றியூர் சண்முகனார் பூங்காவில் உள்ள நீச்சல் குளம் பராமரிப்பில் உள்ளது. கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்கள் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும்,’’ என்றனர்.
Tags:
#மாநகராட்சி
# நீச்சல்பயிற்சி
# கட்டுப்பாடு