மெரினா லூப் சாலையில்போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

மெரினா லூப் சாலையில்போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!!
By: TeamParivu Posted On: April 20, 2023 View: 57

ஏப். 20: மெரினா லூப் சாலையில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதாகவும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவும், அங்குள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்தது. அதில், லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் 75 மீன் கடைகள், 15 குடிசைகள், 21 பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டுள்ளன. மீன் சந்தை அமைக்கும் வரை மீனவர்கள் குடியிருப்பில் இருந்து சாலைக்கு இடையில் உள்ள இடத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், லூப் சாலையின் மேற்கு பகுதியில் உள்ள நடைபாதையில் தற்காலிகமாக மீன்கடைகள் அமைக்கப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கடைகள் ஒழுங்குபடுத்தப்படும்.

கலங்கரை விளக்கத்தின் பின்புறமும், சீனிவாசபுரத்தின் அருகிலும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், யாருக்கும் தர்மசங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை. பொது சாலை மாநகராட்சி சொத்தல்ல. அது மக்கள் சொத்து. ஆனால், சாலையை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

6 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ்

கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை நிறுத்த கோரி மீன்பிடி படகுகளை நிறுத்தி கடந்த 6 நாட்களாக மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே உயர் நீதிமன்றம், மீனவர்களின் தொடர் போராட்டத்தால் மெரினா பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், தேவையில்லாத சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்பட வழிவகுக்கும் என்றும் கண்டனம் தெரிவித்திருந்தது. அதைதொடர்ந்து கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த போராட்டத்தை மீனவர்கள் நேற்று தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். அதற்கான அறிவிப்பை மீனவர்கள் அமைப்புகள் தெரிவித்தனர்.

Tags:
#மெரினா  # லூப்சாலை  # போக்குவரத்து  # மாநகராட்சி  # உயர்நீதிமன்றம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..