சென்னையில் 18 அரசு நூலகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் உரையாற்றுகின்றனர். இதுதொடர்பாக மாநகர நூலக ஆணைக் குழு தலைவர் மனுஷ்ய புத்திரன் வெளியிட்ட அறிக்கை:
உலக புத்தக தினவிழா கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மாநகர நூலக ஆணைக்குழு சென்னையில் 18 நூலகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் உரையாற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. சிறப்பு சொற்பொழிவுகள், கவிதை வாசிப்பு, நூல் அறிமுகம், மாணவர் உரை அரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதன் தொடக்க விழா, அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தின் தேவநேயப்பாவாணர் அரங்கில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார். தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., பொது நூலக இயக்குநர் இளம்பகவத், சென்னை நூலக ஆணைக்குழு தலைவர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, இமையம், பாரதி கிருஷ்ண குமார், ச.தமிழ்ச்செல்வன், இயக்குனர் வசந்த பாலன், பா.ராகவன், அழகிய பெரியவன் உட்பட பலர் சிறப்புரையாற்றுகின்றனர். அண்ணா நகர், நேரு பூங்கா திருவான்மியூர், திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, அயனாவரம் ஆகிய பகுதிகளில் உள்ள பொது நூலகங்களிலும் உலக புத்தக தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
#உலகபுத்தகதினவிழா
# சென்னை
# மாநகரநூலகம்