ஜம்மு-''ஜம்மு -- காஷ்மீரில் கட்டப்பட்டு வந்த நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன,'' என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துஉள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடையே ரயில் சேவையை வழங்கும் வகையில் உதம்பூர் -- ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் பாதை இணைப்புப் பணி துவங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக ரியாசி மாவட்டத்தில் ஆஞ்சி ஆற்றின் மேலே முழுக்க கேபிள்களால் மட்டுமே தாங்கக்கூடிய ரயில் பாலம் அமைக்கப்பட்டுஉள்ளது.
நிலநடுக்கம் உள்ளிட்ட பருவகால சவால்களை எதிர்கொள்ளும் விதமாக, 1,086 அடி உயரத்தில் இந்த 'ஆஞ்சி காட்' பாலம் கட்டப்பட்டுள்ளது.
இதன் நீளம் 1,553 அடியாகும். மொத்தம் 37 ஆயிரம் கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் பணிகள், பல்வேறு கள ஆய்வுகளுக்குப் பின், 2017ல் துவங்கின.
தரையில் இருந்து பாலத்தைத் தாங்கும் வகையிலான ஒற்றைத் துாண் அமைப்பது உள்ளிட்ட பணிகளைத் தொடர்ந்து, இரும்பு கேபிள்கள் இணைக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கியது.
கடந்த 11 மாதங்களில் பாலத்தின் பக்கவாட்டிலும், மத்திய இடைவெளியிலும் 96 இரும்புக் கேபிள்கள் நிறுவப்பட்டுஉள்ளன.
பாலத்தின் அனைத்து பணிகளும் நிறைவுப் பெற்ற நிலையில், இது குறித்த 'வீடியோ'வை, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதில், ''நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலம் 11 மாதங்களில் தயாராகி உள்ளது,'' என குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 'மிகச்சிறப்பு' என பாராட்டி உள்ளார்.
'இந்த ரயில் பாலம் 40 கிலோ வெடிப்பொருட்களின் அதிர்வுகளை தாங்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
'இந்தப் பாதையில், 100 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கலாம். பாலத்தின் நடுவே ஆங்காங்கே சென்சார்கள் அமைக்கப்பட்டுள்ளதால் விபத்துகள் தவிர்க்கப்படும்' என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:
#கேபிள்ரயில்
# பிரதமர்
# நரேந்திரமோடி