சென்னையில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில், போலீசார் ரோந்து வாகனங்களில் இரவு, பகலாக வலம் வருகின்றனர். இதற்காக சென்னை மாநகர காவல்துறையில் 320 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வாகனத்தின் மேல்பகுதி மற்றும் பின்பகுதி ஆகியவற்றில் தலா ஒரு கேமராக்கள் என வாகனத்துக்கு வெளியே 2 கேமராக்கள் பொருத்தப்படுகிறது. வாகனத்தின் உள்ளே டிரைவர் இருக்கையின் அருகில் தனியாக ஒரு கேமரா நிறுவப்பட உள்ளது. இந்த கேமராக்கள் மூலமாக குற்றச்செயல்களை தடுக்கவும், பணியில் உள்ள காவலர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கவும் முடியும்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘‘குற்றச்செயல்களை தடுக்க சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள், கடைகள் மற்றும் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மட்டுமே தற்போது கைகொடுத்து வருகின்றன. ஆனால் பல நேரங்களில் இந்த கேமராக்கள் செயல்படுவதில்லை. இதன் காரணமாக குற்றவாளிகளை அடையாளம் காண்பதும், குற்றசெயல்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களை கண்டுபிடிப்பதும் சிரமமான காரியமாகி விடுகிறது. எனவே, ரோந்து வாகனங்களில் பொறுத்தப்படும் கேமராக்கள் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் சந்தேக நபர்களை துல்லியமாக படம் பிடிக்க முடியும்.
இதற்கான கட்டுப்பட்டு அறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும். ரோந்து வாகனத்தின் வெளிப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக குற்றச்செயல்களை தடுக்க முடியும். வாகனத்தின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள கேமராவின் மூலமாக போலீசார் என்ன செய்கிறார்கள் என்பதை நேரடியாக கண்காணித்து, தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க முடியும். இதனால் போலீசார் தப்பு செய்யாமல் பணியாற்ற முடியும். எனவே, ரோந்து வாகனங்களில் கேமராக்களை பொருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன,’’ என்றார்.
Tags:
#ரோந்துவாகனம்
# சிசிடிவிகேமரா
# போலீசார்