சென்னை மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முக்கிய இடங்களில் புதிய பார்க்கிங் வசதி: கூடுதலாக 10 இடங்களில் ஆய்வு நடத்த முடிவு..!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முக்கிய இடங்களில் புதிய பார்க்கிங் வசதி: கூடுதலாக 10 இடங்களில் ஆய்வு நடத்த முடிவு..!!
By: TeamParivu Posted On: May 12, 2023 View: 55

சென்னை மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை தடுக்க, முக்கிய இடங்களில் பார்க்கிங் வசதிகளை அதிகரிக்கும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு பணிகளை நடத்தி வருகிறது. சென்னையில் முக்கிய வணிக பகுதிகள், வணிக நிறுவனங்கள், சுற்றுலா பகுதிகள், பூங்காக்கள், தனியார் மால்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பார்க்கிங் பிரச்னைகள் என்பது காலந்தொட்டும் முடிவுக்கு வராமல் இருக்கின்றன. போதிய இடவசதி இல்லாததால் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் வாகன ஓட்டிகள் மிகவும் தவிக்கின்றனர். இதனால் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.

இப்படி வாகனங்களை நிறுத்துவதால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவது சென்னையில் பல முக்கிய இடங்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாக இருக்கின்றன.
எனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையோர போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாகனங்களை நிறுத்துவதற்காக தி.நகர், திருவல்லிக்கேணி, அடையாறு, அம்பத்தூர், அண்ணாநகர், அசோக் நகர், பெசன்ட் நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட 83க்கும் மேற்பட்ட இடங்களில் இவை கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 7,000 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடங்கள் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த பார்க்கிங் பிரச்னைக்கு முடிவு ஏற்படாமல் தொடர்ந்து கொண்டே இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலை சென்னை மக்கள் சந்தித்து வருகின்றனர். அதாவது, அரசு போக்குவரத்துத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தில் 3.13 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் அதிகபட்ச வாகனங்கள் சென்னையில் மட்டுமே இயங்குகின்றன என்கிறது புள்ளி விவரங்கள். இதனால் சென்னை மாநகர சாலைகளில் தினம் தினம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வாகனங்களை எல்லாம் நிறுத்துவதற்குப் போதுமான இடவசதியும் கிடையாது. இதனால் பொதுமக்கள் நிறைய சிரமத்தை சந்திக்கிறார்கள்.

பெரும்பாலும், தங்கள் வீடு, அலுவலகங்களுக்கு வெளியே நிறுத்த வேண்டிய நிலைமையே உள்ளது. இப்படி சாலையோரங்களில் நிற்கும் வாகனங்கள் பிற வாகன ஓட்டிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. அதனால், இதற்கு தீர்வு காணும் வகையில் தான் சாலையோரங்களில் பார்க்கிங்களை ஏற்படுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. பார்க்கிங் கட்டணம் மூலம் தற்போது தினமும் ரூ.1.5 லட்சம் வரை வாடகை கட்டணம் சென்னை மாநகராட்சிக்கு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், பயன்பாட்டில் இல்லாத கட்டிடம் மற்றும் மேம்படுத்த வேண்டிய வணிக வளாகம் என கூடுதலாக 10 இடங்களில் வாகனங்களை நிறுத்தும் வசதிகள் குறித்து மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது. இதில் கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டல அலுவலகங்கள், சி.பி.ராமசாமி சாலை வளாகம், தி.நகரில் உள்ள நாயர் சாலை வளாகம் உள்ளிட்டவையும் அடக்கம். குறிப்பாக சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் பகுதிகளில் வாகன நிறுத்தங்களை அதிகப்படுத்தும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதற்கான சாத்திய கூறுகள், ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பார்க்கிங்குகள் அனைத்தும் நவீன முறையில் அமைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ள இடங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. பார்க்கிங் கட்டணம் மூலம் மட்டும் தினமும் ரூ.1.2 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை வசூலாகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளை பொறுத்தவரை சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதே போக்குவரத்து ெநரிசலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. அதை தடுக்கவே இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். முக்கிய இடங்கள் மட்டுமல்ல, தெருக்களிலும் வாகனங்களை வெளியில் நிறுத்துவதை கட்டுப்படுத்த அந்த தெருக்களில் உள்ள காலி இடங்களில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். அதன் அடிப்படையில், தெருக்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் தேவை குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இப்போது 5 ஆயிரம் இடங்கள் உள்ளது. ஆய்வுக்கு பிறகு, இது 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அதிகரிக்கும்.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய சென்சார் கருவி பொருத்தப்படும். இது உள்ளே நுழையும் வாகனத்தின் பதிவு எண்ணை உடனடியாக சேகரித்து ரசீது வழங்கும் கட்டண மீட்டருக்கு அனுப்பி வைக்கும். பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனத்துக்கு காவல்துறையுடன் இணைந்து உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். அரசு போக்குவரத்துத் துறையின் புள்ளி விவரங்களின்படி, மாநிலத்தில் 3.13 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதிகபட்ச வாகனங்கள் சென்னையில் மட்டுமே இயங்குகின்றன என்கிறது புள்ளி விவரங்கள். இதனால் சென்னை மாநகர சாலைகளில் தினம் தினம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Tags:
#சென்னை  # மாநகராட்சி  # பார்க்கிங் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..