தமிழக அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்களின் நம்பர் பிளேட்களில் ‘ஜி’ அல்லது ‘அ’ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள், வாகன நெரிசல், விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களுக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதைத்தவிர, நேரடியாக களத்தில் நின்றும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையிலும், ஏ.என்.ஆர்.பி. வகை கேமராக்கள் மூலமாகவும் விதிமீறல் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், நிலுவை அபராதமும் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் கடந்த 4 மாதங்களில் ₹5.84 கோடியும், போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து சுமார் ₹12 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விதிகளை மீறும் அரசு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில், விதிமீறும் அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து அரசு வாகனங்களுக்கும் தற்போது போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.
அதன்படி, ஐபிஎஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. அரசு வாகனங்களின் நம்பர் பிளேட்களில், அரசு வாகனம் என்று குறிக்கும் வகையில் ‘அ’ என தமிழிலும், ‘ஜி’ என ஆங்கிலத்திலும் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும்.
ஆனால், அரசுக்கு சொந்தமில்லாத வாகனங்களிலும் பலர் ‘ஜி’ அல்லது ‘அ’ என எழுதுவதாக பொதுமக்கள் பலர் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் போட்டோவுடன் புகார் தெரிவித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வாகனத்தை பயன்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு இப்போது ₹500 முதல் ₹1500 வரை அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து காவல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு வாகனம் அல்லாத வாகனங்களின் நம்பர் பிளேட்களில் ‘இ’ அல்லது ‘அ’ என்ற எழத்துக்கள் எழுதப்பட்டோ அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டோ மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 3 உட்பிரிவு (கே)-ன்படி அரசு வாகனம் என்றால் தமிழக அரசின் வாகனங்கள் மட்டுமே. அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு உள்ளது. எனவே உரிய வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு பெற்ற தமிழக அரசின் வாகனங்களில் மட்டுமே ‘ஜி’ அல்லது ‘அ’ என்ற எழுத்துக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
எனவே, தமிழக அரசு வாகனங்களை தவிர மற்ற அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் ‘ஜி’ அல்லது ‘அ’ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
#தமிழகஅரசு
# நம்பர்பிளேட்
# வாகனங்கள்